செந்தில் பாலாஜி வழக்கை முடிக்க மேலும் 4 மாதம் கால அவகாசம்... உயர்நீதிமன்றம் உத்தரவு!

நேற்றும் கூட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 41வது முறையாக நீட்டிக்கப்பட்டது.

Jun 26, 2024 - 15:27
செந்தில் பாலாஜி வழக்கை முடிக்க மேலும் 4 மாதம் கால அவகாசம்... உயர்நீதிமன்றம் உத்தரவு!
செந்தில் பாலாஜி

சென்னை: செந்தில் பாலாஜி மீதான வழக்கை முடிக்க முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மேலும் 4 மாதம் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார்.

கடந்த 2014 ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன்பேரில் கடந்த ஆண்டு செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தது. செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டு ஓராண்டு கடந்து விட்டது.

உடல்நிலை உள்பட பல்வேறு காரணங்களை கூறி அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை நீதிமன்றங்கள் தொடந்து தள்ளுபடி செய்து வருகின்றன. நேற்றும் கூட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 41வது முறையாக நீட்டிக்கப்பட்டது.

இதற்கிடையே கடந்த பிப்ரவரி மாதம் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்தது. மேலும் செந்தில் பாலாஜி மீதான வழக்கை மூன்று மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு இருந்தது.

ஆனால் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை இன்னும் தொடங்காத நிலையில், விசாரணையை முடிக்க மேலும் 4 மாதம் அவகாசம் வழங்க உத்தரவிடக்கோரி முதன்மை அமர்வு நீதிமன்றம் சிறப்பில் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது.

இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்கு விசாரணை நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், ''விசாரணை நீதிமன்றத்துக்கு காலவரம்பு நிர்ணயித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, மீண்டும் எந்த காலவரம்பும் நிர்ணயிக்க கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற உத்தரவை மதிப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதி, ''இந்த வழக்கில் மனு மீது மனுக்கள் தாக்கல் செய்யாமல் விசாரணையை முடிக்க ஒத்துழைக்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவை சாதகமாக காட்டக் கூடாது'' என்று செந்தில் பாலாஜி தரப்புக்கு அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து பேசிய நீதிபதி, ''சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, இந்த வழக்கை முடிக்க மேலும் 4 மாத அவகாசம் கோரியிருக்கிறார். அதற்குள் வழக்கை முடிக்கும் திறமை அவருக்கு உள்ளது. ஆகவே இந்த வழக்கை விசாரித்து முடிக்க 4 மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது. அதற்குள் வழக்கின் விசாரணையை முடிக்க வேண்டும்'' என்று உத்தரவு பிறப்பித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow