மகளிர் உரிமை தொகை 80 லட்சம் பெண் பயனாளிகள் அதிரடி நீக்கம்
மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 80 லட்சம் பெண் பயனாளிகளை மகராஷ்டிரா அரசு நீக்கி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை கடந்த திமுக ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார். தமிழகத்தை தொடர்ந்து பிற மாநிலங்களில் இந்த திட்டத்தை வேறு வேறு பெயரில் தொடங்கின. கர்நாடக மாநிலத்தில் 'Gruha Lakshmi Scheme' என்கிற பெயரில் மாதம் ரூ. 2000 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
டெல்லி மாநிலத்தில் 'Mahila Samriddhi Yojana' என்கிற பெயரில் மாதம் ரூ. 2500 பெண்களுக்கு வழங்கப்படுகிறது. அதுவே அசாம் மாநிலத்தில் 'Orunodoi Scheme' என்கிற பெயரில் மாதம் ரூ.1250 பெண்களுக்கு வழங்கப்படுகிறது. அதேபோல் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 'முக்கியமந்திரி மாஜி லட்கி பஹின் யோஜனா' என்கிற பெயரில் தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வரவு வைக்கப்பட்டு வந்தது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 21 முதல் 65 வயதுக்குட்பட்ட ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சத்திற்கும் குறைவான குடும்ப வருமானம் கொண்ட பெண்கள் இந்த திட்டத்தின் சேர்க்கப்பட்டனர். அந்த வகையில் 2.46 கோடி பயனாளிகள் இந்த திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,500 பெற்று வந்தனர்.தற்போது பெண் உதவித் தொகை திட்டத்தில் 80 லட்சம் பெண்களை மகராஷ்டிரா அரசு நீக்கியுள்ளதாக தெரிகிறது. அண்மையில் பெண் பயனாளிகள் ஆவணங்களை சரிபார்க்கும் வகையில் அவர்களின் விவரங்களை இ-கேஒய்சி-ஐ (e-KYC) மூலம் இணைக்க மாநில அரசு உத்தரவிட்டது. இதற்கான காலக்கெடு முடிந்தும் இ-கேஒய்சி-ஐ (e-KYC) முடிக்காத 80 லட்சம் பயனாளிகளான பெண்கள் கடந்த இரு மாதங்களாக தங்களுக்கான மாத உதவித் தொகையை பெறவில்லை.
இந்த திட்டத்தில் நடைபெற்ற சீராய்வு நடவடிக்கையை தொடர்ந்து இந்த 80 லட்சம் பயனாளிகள் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. நீக்கப்பட்ட பயனாளிகள் எந்தச் சூழ்நிலையிலும் மீண்டும் சேர்க்கப்படாது என்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் புதிய பயனாளிகள் தற்போது சேர்ப்பதற்கும் மகாராஷ்ட்ரா அரசு மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் மகராஷ்டிரா பெண்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?