ஆலோசனைக் கூட்டத்தில் நடந்தது என்ன? – போட்டுடைத்த ஜெயக்குமார்!

அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டதில் நடந்தது என்ன என்பது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

Oct 2, 2024 - 15:42
ஆலோசனைக் கூட்டத்தில் நடந்தது என்ன? – போட்டுடைத்த ஜெயக்குமார்!

மகாத்மா காந்தியின் 156வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து காமராஜரின் 49வது நினைவு தினத்தை முன்னிட்டு அதே வளாகத்தில் உள்ள காமராஜரின் உருவ சிலைக்கும் அஞ்சலி செலுத்தினார். 

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டதில் 10 சதவீத வாக்கு குறைந்துள்ளது என்று எடப்பாடி கூறியது குறித்து பதிலளித்தார். 

அப்போது, “வெளியில் பேசுகிற விஷயங்கள் குறித்து கருத்து கூறலாம். அரங்குக்குள் பேசுகிற விஷயம் குறித்து கருத்து கூற முடியாது.  நிர்வாகிகளை ஊக்குவிப்பதற்காக கூட கூறியிருக்கலாம். இந்த கருத்து விவாதத்திற்கு உரிய பொருள் அல்ல” என பதில் அளித்தார்.

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் டிஎன்பிஎஸ்சி வழக்கு தொடர்பாக திமுக வழக்கறிஞர் வில்சன் கூறியதற்கு பதிலளித்த ஜெயக்குமார்,  “ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனை கடிக்கும் கதையாக அராஜகத்தின் உச்சகட்டமாக இருக்கிற திமுக நீதிமன்றத்தையும் விட்டுவைக்கவில்லை. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பா? நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட தீர்ப்பா? என்று நீதிமன்றத்தை அவமரியாதை செய்தவர் கருணாநிதி. இவர்களை பொறுத்தவரை ஜனநாயக நாட்டில் நீதிமன்றம் இல்லை, பத்திரிக்கை துறை இல்லை. இவர்கள் வைத்ததுதான் சட்டம் என மன்னர் ஆட்சி போல நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அழிவுக்கு உண்டான காலத்தை நோக்கி திமுக சென்று கொண்டிருக்கிறது என்பதின் வெளிப்பாடாக வில்சனின் செயல்பாடு உள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “காந்தி ஜெயந்தி அன்றே கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் காய்ச்சிய ஒருவரை பிடித்திருக்கிறார்கள். விசிக நடத்துகிற மாநாட்டில் திமுக கலந்து கொள்வது ஜீவகாருண்யம் மாநாட்டில் கசாப்பு கடைக்காரன் கலந்து கொள்வது போன்று” எனக் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow