அடுத்தடுத்து விலகும் முக்கியப்புள்ளிகள்… ஆட்டம் காணும் ராவணன் குடில்..!
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தவெகவில் இணைந்து வரும் நிலையில், தற்போது நாதகவைச் சேர்ந்தவர்களும் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
நாதக வழக்கறிஞர் பாசறை மாநிலச் செயலாளர் எஸ். சங்கர், அக்கட்சியில் இருந்து விலகி அமைச்சர் நிர்மல் குமார் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். இவர் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வழக்கறிஞராகவும், 2016 மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல்களில் நாதக சார்பில் போட்டியிட்டவராகவும் இருந்துள்ளார். சீமானின் வழக்கறிஞரே தவெகவில் இணைந்த்த்து, ராவணன் குடிலை ஆட்டம் காண வைத்த நிலையில், தற்போது நாதகவில் இருந்து மேலும் ஒரு முக்கியப்புள்ளி விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாதகவைச் சேர்ந்த இயக்குநர் களஞ்சியமும் கட்சியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, சீமானுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கருத்து வேறுபாடுகளுடன் தொடர்ந்து பயணிப்பது ஆரோக்கியமானதாக இருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், நாதக உறுப்பினர்களே சக கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் மீது வெறுப்பரசியலை கையாள்வது வேதனையளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்குப் பிறகு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து அமைதியாக இருந்து வரும் நிலையில், அக்கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி வருவது கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று தான் தனியார் நிகழ்ச்சி ஒன்றில், ”கண்ணாடி பார்க்கையில அங்க முன்னாடி உன் முகந்தான்.. கண்ணே நீ போகையில கொஞ்சும் கொலுசாக என் மனந்தான்” என்று மகிழ்ச்சியாக மேடையில் பாடினார் சீமான். ஆனால் இன்றோ அவர் கண்முன்னே நாதகவை சேர்ந்த முக்கியப்புள்ளிகள் கட்சியில் இருந்து விலகிக் கொண்டிருக்கிறார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது நாதகவில் இருந்து விலகியுள்ள களஞ்சியம், தற்போது தவெகவில் இணைய வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அதிமுகவைத் தொடர்ந்து நாதக நிர்வாகிகளும் தவெக பக்கம் திரும்பி வருவது, வரும் நாட்களில் தமிழக அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாதக கூடாரத்திலிருந்து மேலும் பலர் தவெகவில் இணைய உள்ளார்களா என்பது இனிவரும் நாட்களில் தெரியவரும்.
What's Your Reaction?





