சொத்து வரி உயர்வு: ”மக்களை முட்டாள்களாக நினைக்கக் கூடாது”... பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

சென்னை மாநகராட்சியில் 6 சதவீதம் சொத்து வரி உயர்வதற்கு  பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Sep 27, 2024 - 17:35
சொத்து வரி உயர்வு: ”மக்களை முட்டாள்களாக நினைக்கக் கூடாது”... பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

சென்னை மாநகராட்சியில் 6 சதவீதம் சொத்து வரி உயர்வதற்கு  பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.


2025- 26ம் நிதியாண்டில் சொத்து வரியை, 6 சதவீதம் உயர்த்த, நகராட்சி நிர்வாகத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி சென்னை மாநகராட்சியில் 6 சதவீதம் சொத்து வரி உயர்கிறது. இந்த சொத்து வரி உயர்வு என்பது சொத்துகளின் அளவு மற்றும் மண்டலங்களை பொறுத்து வேறுபடக்கூடியது.  சென்னையை எடுத்து கொண்டால் கடந்த ஆண்டு குடியிருப்புகளுக்கான சொத்து வரி என்பது 50 சதவீத்தில் இருந்து 150 சதவீதம் உயர்த்தப்பட்டது. இடம், கட்டத்தின் அளவைப் பொறுத்து மக்களுக்கான சொத்து வரியில் வித்தியாசம் இருந்தது. 

முன்னதாக சொத்து வரி உயர்த்துவது தொடர்பாக உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் டவுன் பஞ்சாயத்து இயக்குநர் சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், உள்ளாட்சி நிர்வாக மண்டல இயக்குநர்களுக்கு கடந்த 5ம் தேதி உத்தரவு பிறப்பிக்கபட்டது. அதன்படி சென்னை மாநகராட்சியில் 6 சதவீதம் சொத்து வரியினை உயர்த்தி  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். அவர் பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சென்னையில் சொத்துவரி மேலும் 6% உயர்வு: மக்களை முட்டாள்களாக நினைக்கக் கூடாது- சொத்துவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும்! சென்னை மாநகராட்சியில் சொத்துவரியை மேலும் 6% உயர்த்தி சென்னை மாநாகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.” 

”இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் சொத்துவரி மேலும் 6% உயர்த்தப்படவுள்ளது. மக்களை பாதிக்கும் வகையிலான சொத்துவரி உயர்வு கடுமையாக கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே, கடந்த 2022&ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 150% வரை சொத்துவரி உயர்த்தப் பட்ட நிலையில், மீண்டும் ஒருமுறை சொத்துவரி உயர்த்தப்படுவதை அனுமதிக்க முடியாது.”

”தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் சொத்து வரியுடன் தொழில் வரியும் அண்மையில் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் சொத்துவரியும் உயர்த்தப் பட்டால் அது வீட்டு உரிமையாளர்களை மட்டும் பாதிக்காது. வாடகைக்கு குடியிருப்பவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் கடுமையாக பாதிக்கும். மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதாகக் கூறி வெற்றி பெற்ற திமுக அரசு மக்கள் மீது வரி உயர்வு, கட்டண உயர்வு என அடுத்தடுத்து சுமைகளை சுமத்திக் கொண்டிருக்கிறது. மக்களை முட்டாள்களாக நினைத்து இவ்வளவு சுமைகளை சுமத்துவதை அனுமதிக்க முடியாது.”

”திமுகவுக்கு வாக்களித்ததைத் தவிர தமிழ்நாட்டு மக்கள் ஒரு பாவமும் செய்யவில்லை. அதற்காக இவ்வளவு அதிக தண்டனை தேவையில்லை. மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகரில் சொத்துவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டின் பிற நகரங்களில் சொத்துவரியை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow