நைஸாக கழட்டிவிடப்படும் நயினார்...? மாறும் பாஜக மாநிலத் தலைமை..?

அண்ணாமலையின் புதிய அரசியல் பயணத்தால், தமிழக பாஜகவினர் அவர் பக்கம் சாய்ந்துக் கொண்டிருப்பதால், நயினாரின் தலைமை பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நயினாரை நைஸாக தூக்கி, அண்ணாமலையை போல் இள ரத்தத்தை கட்சிக்குள் பாய்ச்ச டெல்லி மேலிடம் முடிவெடுத்துள்ளதாம். இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

நைஸாக கழட்டிவிடப்படும் நயினார்...? மாறும் பாஜக மாநிலத் தலைமை..?

திமுக ஆட்சியில், தமிழ்நாட்டில் திமுகவிற்கு மிகப்பெரிய சவாலாக இருந்தவர் அண்ணாமலை. DMK files, செந்தில்பாலாஜி மீதான குற்றச்சாட்டு, திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்துவது, என டெல்லி கொடுத்த வேலையை கனக்கச்சிதமாக செய்தவர் அண்ணாமலை. திமுக வெறுப்பை தவெக கையில் எடுப்பதற்கு முன்பே அதற்கான அடித்தளத்தை ஆழமாக போட்டவர் அண்ணாமலை என்று சொன்னால் அது மிகையாகாது. ஒருவகையில் திமுக ஆட்சி கவிழ அண்ணாமலையும் ஒரு மிக முக்கியக் காரணமே.  

அப்படிப்பட்ட அண்ணாமலையை, சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணிக்காக தலைமை பதவியில் இருந்து தூக்கி, அதிமுகவுடன் இணக்கமாக இருந்த நயினார் நாகேந்திரனை தலைவராக்கியது டெல்லி மேலிடம்.

அண்ணாமலையோ, தலைமை பதவி போனால் என்ன? அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், டெல்லி தலைமை கல்தா கொடுக்க, தற்போது பாஜகவில் இருந்து விலகி, புதிய அரசியல் இயக்கத்தை உருவாகியுள்ளார் அவர். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் ஆசியுடன் புதிய இயக்கத்தைத் தொடங்கியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அண்ணாமலையின் இந்த முடிவால், பாஜகவிற்கு மிகப்பெரிய அடி விழுந்துள்ளது. அதாவது, பாஜகவில் அவருக்கென்று ஆதரவாளர்கள், குறிப்பாக இளைஞர்கள் அண்ணாமலைக்கு பெரும் ஆதரவு தெரிவித்து வந்தனர். அவர்கள் அனைவரும் அண்னாமலையின் புதிய அரசியல் இயக்கத்தில் இணைந்துள்ளனர். கொத்துக் கொத்தாக பாஜகவில் இருந்து விலகி, அண்ணாமலையுடன் அவர்கள் சேர்ந்துக் கொண்டிருப்பதால், பாஜகவில் நயினாரின் தலைமை கேள்விக்குறியாகியுள்ளது.

அண்ணாமலையுடன் பாஜகவினர் இணைவதை தடுப்பதற்காக, “பாஜகவிலிருந்து விலகிய அண்ணாமலைக்கு எப்படி பாஜக தலைவர்களின் ஆசி இருக்கும் என்பதை சிந்தித்துப் பார்க் கவேண்டும். எனவே, பாஜகவினர் யாரும் அவரது இயக்கத்தில் சேர வேண்டாம். பாஜகவில் இருப்பவர்கள் மட்டுமே பாஜக தொண்டர்களாகக் கருதப்படுவர். அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் சேர்ந்தவர்கள் திரும்ப பாஜகவுக்கு வந்தால் அவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவதுடன், நடவடிக்கையும் இருக்காது. இயக்கத்தில் சேர்ந்துகொண்ட யாரும் பாஜகவில் இருக்க முடியாது” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார்.

ஆனால், நயினாரின் பேச்சை யாரும் கேட்பதாகத் தெரியவில்லை. குறிப்பாக பாஜக இளைஞர்கள், ரஜினி ரசிகர்கள் என அனைவரும் அண்ணாமலையின் இயக்கத்தில் இணைந்துவருகின்றனர். இதனால், நயினார் பதவிக்கே ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

கூட்டணியை விட கட்சியை பலமாக வைத்திருப்பதே முக்கியம் என்று நினைக்கும் டெல்லி மேலிடம், அதிமுகவில் இருந்து வந்த நயினாரை தலைமை பதவியில் இருந்து தூக்கி, அண்ணாமலையை போன்று ஒரு இளம் தலைவரை தமிழக பாஜகவின் தலைவராக நியமிக்க முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நைஸாக நயினாரை கழட்டிவிட நினைக்கும் பாஜக, அடுத்தது யாரை மாநிலத் தலைவராக்கப் போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow