34 பேர் உயிரை குடித்த கள்ளச்சாராயம்... அரசு மீது பாய்ந்த எதிர்க்கட்சிகள்... ஸ்டாலின் சொல்வது என்ன?
'தமிழ்நாடு அரசு கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறி விட்டது. அப்பாவி மக்கள் உயிரிழப்புக்கு தமிழ்நாடு அரசே காரணம். இதற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்' என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
![34 பேர் உயிரை குடித்த கள்ளச்சாராயம்... அரசு மீது பாய்ந்த எதிர்க்கட்சிகள்... ஸ்டாலின் சொல்வது என்ன?](https://kumudam.com/uploads/images/202406/image_870x_667384c75afe8.jpg)
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 34 பேர் உயிரிழந்தனர். இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி நகர்ப்பகுதியைச் சேர்ந்த கருணாபுரம் பகுதியில் கண்ணுக்குட்டி என்பவர் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். அப்பகுதியை சேர்ந்த பலர் இந்த கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர்.
கள்ளச்சாராயத்தை குடித்த பலர் கடுமையான தலைவலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டனர். மேலும் சிலர் மயங்கி விழுந்தனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட சுமார் 84 பேர் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் 30 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 34பேர் இதுவரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 10 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ஏற்கெனவே தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக உள்ளதாக கூறப்படும் நிலையில், கள்ளச்சாராயத்துக்கு 34 பேர் உயிரிழந்தது தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'தமிழ்நாடு அரசு கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறி விட்டது. அப்பாவி மக்கள் உயிரிழப்புக்கு தமிழ்நாடு அரசே காரணம். இதற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்' என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளை கூண்டோடு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாவட்ட போலீஸ் எஸ்.பி சமய் சிங் மீனா தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக ரஜத் சதுர்வேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட அமலாக்கப்பிரிவினரும் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டனர்.
மேலும் இந்த விவகாரத்தை சிபிசிஐடி வசம் ஒப்படைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்தார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின், ''கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்'' என்று கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு சந்தித்து ஆறுதல் கூறினார்கள். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய எ.வ.வேலு, ''கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் அருந்தியுள்ளனர். இதனால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
விரும்பத்தகாத சம்பவம் நடைபெற்றுள்ளது; தவறு நடைபெற்றுள்ளது. இதை நியாயப்படுத்த விரும்பவில்லை.
சிகிச்சை பெற்று வருபவர்கள் உயிர் பிழைத்து வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. காவல்துறை சற்று மெத்தனமாக செயல்பட்டதால் முதல்வர் ஸ்டாலின் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளார்'' என்று தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?
![like](https://kumudam.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudam.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudam.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudam.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudam.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudam.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudam.com/assets/img/reactions/wow.png)