அமளி செய்த அதிமுக எம்எல்ஏக்கள்… சஸ்பெண்ட் செய்த சபாநாயகர்.. கோரிக்கை வைத்த முதல்வர்.. மீண்டும் அனுமதி

சட்டசபையில் தொடர் அமளியில் ஈடுபட்டு கூச்சல் குழப்பம் செய்த அதிமுக எம்எல்ஏக்கள் இன்று ஒருநாள் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

Jun 21, 2024 - 11:16
Jun 21, 2024 - 11:17
அமளி செய்த அதிமுக எம்எல்ஏக்கள்… சஸ்பெண்ட் செய்த சபாநாயகர்.. கோரிக்கை வைத்த முதல்வர்.. மீண்டும் அனுமதி

சென்னை: கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் சட்டசபையில் புயலை கிளப்பியது. அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபடவே  அவர்கள் வெளியேற்றப்பட்டனர். அதிமுக எம்எல்ஏக்கள் இன்று ஒருநாள் சட்டப்பேரவையில் பங்கேற்க அனுமதி இல்லை என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். பிரதான எதிர்கட்சி உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் விடுத்த கோரிக்கையை ஏற்று சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து மீண்டும் அவைக்குள் அனுமதித்தார் சபாநாயகர் அப்பாவு.

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்தவர்கள் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபையிலும் இந்த சம்பவம் புயலை கிளப்பியது. அதிமுக எம்எல்ஏக்கள் இன்று காலையிலேயே கருப்பு சட்டை அணிந்து அவைக்கு வந்தனர். 

அவை துவங்கிய உடன் அதிமுக எம்எல்ஏக்கள் கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதற்கு அப்பாவு மறுப்பு தெரிவிக்கவே கைகளில் பேப்பரை ஏந்தி அமளியில் ஈடுபட்டனர். அதற்கு சபாநாயகர் அப்பாவு அதிமுக எம்எல்ஏக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். அமளியில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் எனவும் அமைதியாக அமர வேண்டும் எனவும் சபாநாயகர் வலியுறுத்தினார். மிரட்டல் விடும் வகையில் நடந்து கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபநாயாகர் எச்சரித்தார். 

அதனை கேட்காத அதிமுக எம்எல்ஏக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டசபையை விட்டு அவை காவலர்களால் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாரை அவைக்காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.

இதனையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டது ஏன் என்று அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்தார். அவையை விட்டு வெளியேற்றப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சபைக்கு வெளியே முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சட்டசபையில் தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று கூறினார். கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று அரசு முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசி சபாநாயகர் அப்பாவு, "கவன ஈர்ப்பு தீர்மானத்தை பேச எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுக்கவில்லை. சட்டப்பேரவை மாண்பை குலைக்கும் வகையில் நடந்துகொண்டதால் தான் எதிர்க்கட்சியினர் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டோர் பேசியது எதுவும் சட்டப்பேரவை குறிப்பில் இடம்பெறாது. விதிகளை மீறி நடந்துகொண்டதால் இன்று ஒருநாள் மட்டும் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் அதிமுகவினர் பங்கேற்க முடியாது" என்றார். இதேபோல் பாஜக, பாமக எம்எல்ஏக்கள் சட்டசபை நடவடிக்கைகளை இன்றைய தினம் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

இதனிடையே சட்டசபையில் பேசிய முதல்வர் கள்ளக்குறிச்சி சம்பவம் விரும்பத்தகாத நிகழ்வு என்று கூறினார். அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டது சரியல்ல. கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது எதிர்கட்சி என்ற வகையில்  அதிமுக எம்எல்ஏக்கள் பேச அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்ற சபாநாயகர் அப்பாவு,சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்வதாக கூறினார். வினாக்கள் விடைகள் நேரத்திற்குப் பிறகு அதிமுக எம்எல்ஏக்கள் மீண்டும் சட்டசபைக்கு வரலாம் என அனுமதி அளித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow