நெருங்கும் தேர்தல் நாள்... சத்தீஸ்கரில் என்கவுண்ட்டர்... 29 பேர் கொலை... திக் திக் காட்சிகள்!

சத்தீஸ்கரின் கான்கெர் மாவட்டத்தில் 29 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வீடியோவின் திக் திக் நிமிடக் காட்சிகள் வெளியாகியிருக்கிறது.

Apr 17, 2024 - 09:30
Apr 17, 2024 - 09:33
நெருங்கும் தேர்தல் நாள்... சத்தீஸ்கரில் என்கவுண்ட்டர்... 29 பேர் கொலை... திக் திக் காட்சிகள்!

மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் நிறைந்த சத்தீஸ்கரின் கான்கெர் தொகுதியில் வருகிற 25ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் பினகுண்டா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் ஆலோசனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் மாநில போலீசாரின் மாவட்ட ரிசர்வ் படை உள்ளிட்ட 200 பேர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்தக் குழுவுக்கு குடியரசுத்தலைவர் விருதுபெற்ற லக்ஷ்மன் கேதா என்பவர் தலைமை தாங்கினார். தொடர்ந்து அப்பகுதியில் நீண்ட நேரம் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 29 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டு 3 பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்தனர்.

ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்ட இந்நிகழ்வு ஒரு வரலாற்று சம்பவம் எனக் கூறிய சத்தீஸ்கர் முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய், பாதுகாப்புப்படை வீரர்களின் தைரியத்துக்கு வணக்கம் செலுத்துவதாகக் கூறினார். இந்நடவடிக்கை அமைதியை உறுதி செய்வதற்கான மிகப்பெரிய முன்னெடுப்பு என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் பினகுண்டா வனத்தில் துப்பாக்கிச்சூடு நடந்த திக் திக் நிமிடக் காட்சிகள் வெளியாகியுள்ளன. ஒரு பாதுகாப்புப் படைவீரர் எடுத்த அந்த ஒரு நிமிட வீடியோவில், 20 விநாடிகள் வரை பேரமைதியைக் காண முடிகிறது.

தொடர்ந்து கடுமையான துப்பாக்கிச்சூடு நடக்கிறது. இதையடுத்து யாரும் பின்னால் இருந்து சுட வேண்டாம் என தனது சக பாதுகாவலர்களுக்கு வீடியோ எடுக்கும் நபர் எச்சரிப்பதைத் தொடர்ந்து வீடியோ முடிகிறது. 44 மாவோயிஸ்டுகளைக் கொன்ற என்கவுண்டர் Specialist-ஆன லக்ஷ்மன் கேவட், இந்தக் குழுவுக்கு ஆரம்பத்தில் இருந்தே தலைமை தாங்கி 29 பேர் கொல்லப்பட காரணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்தோரில் மாவோயிஸ்ட் தலைவர் சங்கர் ராவ், லலிதா ஆகியோரது தலைக்கு தலா 25 லட்ச ரூபாயும், வினோத் காவ்டோ தலைக்கு 10 லட்ச ரூபாயும் பரிசாக முன்னர் அறிவிக்கப்பட்டது.

மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கு 8 நாட்களே உள்ள நிலையில், 29 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்ட சம்பவம் சத்தீஸ்கரில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow