அனல் காற்று.. உக்கிரமாக வீசப்போகும் வெப்ப அலை.. உஷார் மக்களே.. வானிலை மையம் ஆரஞ்ச் அலர்ட்

ஈரோட்டில் கடந்த சில நாட்களாக அனல் காற்று வீசி வருகிறது. தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீசும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

Apr 23, 2024 - 14:28
அனல் காற்று.. உக்கிரமாக வீசப்போகும் வெப்ப அலை.. உஷார் மக்களே.. வானிலை மையம் ஆரஞ்ச் அலர்ட்

அக்னி நட்சத்திர காலத்திற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசத் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு கர்நாடகா மாவட்டங்கள் ஒரிசா பீகார் உத்திரபிரதேச மாநிலங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என  இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.  மேற்கு வங்கத்தை பொறுத்தவரை அதிகளவு வெப்பஅலை  வீச வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இன்று முதல் வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி வரை கடலோர ஆந்திர பிரதேஷ், ஏனாம், ராயல் சீமா, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கடலோர கர்நாடகா, கொங்கன், கோவா, கேரளா மற்றும் மாஹே பகுதிகளில் வெப்பம் மற்றும் ஈரப்பதமான வானிலை நிலவ வாய்ப்பிருப்பதாகவும், பீகார் மற்றும் இமயமலையை ஒட்டிய மேற்குவங்க பகுதிகளில் இன்றும், ஒடிசாவில் இன்று மற்றும் நாளை வெப்பம் மற்றும் ஈரப்பதமான வானிலை நிலவ வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் ஓரிரு  இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி கோவை மாவட்டம் சோலையார் பகுதியில் 2 செமீ மழை பெய்துள்ளது. சிவகங்கை மாவட்டம்  சிங்கம்புணரியில் 1 செமீ மழை பதிவாகியுள்ளது. 

அதிகபட்ச வெப்பநிலை :  தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட 2° – 4° செல்சியஸ் அதிகமாக இருந்தது.   வட தமிழக உள்  மாவட்டங்களில்  ஓரிரு  இடங்களில்  இயல்பை விட  மிக அதிகமாக இருந்தது. 

கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டத்தில் வெப்ப அலை வீசியது. அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 43.0° செல்சியஸ், சேலத்தில் 41.6° செல்சியஸ், வேலூரில் 41.5° செல்சியஸ், தர்மபுரி & கரூர் பரமத்தியில் 41.2° செல்சியஸ், திருத்தணி & திருப்பத்தூரில் 40.8° செல்சியஸ், மதுரை விமான நிலையத்தில் 40.7° செல்சியஸ், திருச்சியில் 40.3° செல்சியஸ், மதுரையில் (நகரம்)  40.2° செல்சியஸ், கோயம்புத்தூர் (விமான நிலையம்) மற்றும் நாமக்கல்லில் 40.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35° – 39° செல்சியஸ்    மற்றும் மலைப் பகுதிகளில் 23° –30°  செல்சியஸ்  பதிவாகியுள்ளது.  சென்னை மீனம்பாக்கத்தில் 37.3° செல்சியஸ்  மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.7° செல்சியஸ்   பதிவாகியுள்ளது.

குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 23.04.2024 முதல் 29.04.2024 வரை தென் தமிழகத்தில்  ஓரிரு  இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும்.  வட தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய  முன்னறிவிப்பு: 

23.04.2024  முதல் 27.04.2024 வரை அதிகபட்ச   வெப்பநிலை  தமிழக  உள்  மாவட்டங்களின்  ஒருசில  இடங்களில்  இயல்பை விட 2° – 4° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச  வெப்பநிலையில்  பெரிய  மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.

அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39°–41° செல்சியஸ், இதர  தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36°–38° செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஈரப்பதம்: 23.04.2024 முதல் 27.04.2024 வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்  பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-85 % ஆகவும்  இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  ஓரிரு இடங்களில்  அசௌகரியம் ஏற்படலாம்.

இன்று 23.04.2024  நாளைய தினம் 24.04.2024 வரை வட  தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை  ஏதுமில்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow