கரூருக்கு புறப்பட்டார் முதலமைச்சர் விஜய்...32 குடும்பங்களுக்கு அரசு பணி ஆணை!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 32 பேரின் குடும்பங்களுக்கு அரசு பணி ஆணை வழங்கவும், ₹1,700 கோடி தொழிற்சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டவும் முதலமைச்சர் கரூருக்கு புறப்பட்டுள்ளார்.

Jul 10, 2026 - 10:58
Jul 10, 2026 - 11:00
கரூருக்கு புறப்பட்டார் முதலமைச்சர் விஜய்...32 குடும்பங்களுக்கு  அரசு பணி ஆணை!

கடந்த ஆண்டு தவெக பிரசாரத்தின் போது கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணிக்கான ஆணை வழங்குவதற்காக தமிழக முதலமைச்சர் விஜய்  நீலாங்கரை வீட்டிலிருந்து புறப்பட்டு கரூருரை நோக்கி பயணம் செல்கின்றார். இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த 32 பேர் குடும்பத்துக்கு இன்று நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அரசு பணி ஆணை வழங்க உள்ளார்.

கரூர் செல்வதற்காக சென்னை நீலாங்கரை இல்லத்தில் புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு சென்றடைந்தார்.  அங்கிருந்து சாலை வழியாக கரூருக்கு செல்ல இருக்கின்றார். 

அதனைத் தொடர்ந்து மதியம் 12.45 மணிக்கு கரூர் அட்லஸ் கலையரங்கத்தில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்நிகழ்ச்சி முடிந்த பின்னர் அங்கிருந்து அவர் கரூர் தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு  புறப்படுகிறார். அப்போது மக்களை சந்தித்தபடி ரோடு-ஷோ நிகழ்ச்சி நடத்துகிறார்.

பிற்பகல் 2.50 மணிக்கு சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்படும் முதலமைச்சர் விஜய், 3 மணிக்கு கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு, கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் மணவாசி ஊராட்சியில் ரூ.1,700 கோடி திட்ட மதிப்பீட்டில் அமைய உள்ள தோல் அல்லாத காலணி தயாரிக்கும் புதிய தனியார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதன் மூலம் சுமார் 13,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சேர்ந்த 32 பேருக்கு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் வகையில் அரசு பணி நியமன ஆணைகளை வழங்க இருக்கிறார். மேலும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதற்காக அங்கு சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளன.

முதலமைச்சர் ரோடு-ஷோ செல்ல உள்ள அட்லஸ் கலையரங்கம் முதல் சுற்றுலா மாளிகை வரை கரூர்-கோவை சாலையில் 10 கி.மீ. தூரத்திற்கு சாலை ஓரம் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.முதலமைச்சர் விஜயை நேரில் காண்பதற்காக காலையிலிருந்தே அட்லஸ் மைதானத்தில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

மேற்கண்ட நிகழ்ச்சி செய்தி தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான LIVE VIDEO OUT மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள Press Galleryல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow