தற்போது வெளியாவது கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு-ஜெயக்குமார் காட்டம்

முதலமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் தொடர்பாக முழு வெள்ளை அறிக்கை  வெளியிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Feb 9, 2024 - 07:37
Feb 9, 2024 - 18:24
தற்போது வெளியாவது கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு-ஜெயக்குமார் காட்டம்

அண்ணாமலை ஒரு மண்குதிரை; அவரை நம்பி யாரும் ஆற்றில் இறங்க மாட்டார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பான அதிமுக சார்பில் பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் நடைபெற்றது. இதில் நத்தம் விஸ்வநாதன் தலைமையிலான அதிமுக முன்னாள் அமைச்சர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடம்  இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். 

அப்போது ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, இரட்டை இலை சின்னத்தை முடக்கும் நோக்கில் ஓபிஎஸ் செயல்படுகிறார். அவரை அதிமுகவின் எந்த தொண்டரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழ்நாட்டில், மக்கள் மனதில் எப்போதும் நிலைத்திருக்கும் ஒரே கட்சி அதிமுக தான். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவரது கட்சியை ரேஸ் குதிரைக்கு ஒப்பிட்டு பேசுகிறார். அவர் மண்குதிரை, அவரை நம்பி ஆற்றில் இறங்க போகிறவர்கள் நிலை மண்குதிரை நிலை தான் ஏற்படும். 

அதிமுகவில் இருப்பவர்களை பாஜகவில் சேர்க்கிறேன் என்ற பெயரில் 17 பேரை தேடி பிடித்து அழைத்து வந்து இணைத்து இருக்கிறார்கள். திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து அதிமுகவிற்கு வந்தவர்களை தேடிப் பிடித்து  பாஜகவில் இணைத்து இருக்கிறார்கள். எங்கள் ரத்தம், அதிமுக ரத்தம்; ஒருபோதும் மாறாது. இடையில் வந்தவர்கள் இடையில் சென்று விடுவார்கள். கட்சியில் இணைந்ததன் மூலம் 17 பேரை வைத்து ஒரு மாயையை உருவாக்க நினைக்கிறார்கள். அண்ணாமலை ஆளுநரை சந்திப்பார். ஆளுநர் ரவியிடம் 17 பேரை வைத்து ஆட்சி அமைக்க மனு கொடுப்பார். அப்படித்தான் அண்ணாமலை ஆட்சி அமைக்க முடியும்.

பிஜேபி உள்ளிட்ட தேசிய கட்சிகள் தமிழ்நாட்டில் வெற்றிபெற முடியாது. அதிமுக மட்டும்தான் வெற்றியை பெறும். 21% ஓட்டு வாக்கு வங்கி எங்களிடம் இருப்பதாக கூறுவது அண்ணாமலையின் கருத்து. 21 சதவிதத்தில் பின்பகுதியில் உள்ள ஒன்றை எடுத்து விடலாம்... அண்ணாமலைக்கு (பாஜகவிற்கு) இரண்டு சதவீதம் மட்டுமே வரும். மேலும், ஓபிஎஸ்-ன் கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அவர், அதிமுக வேட்டியே உடுத்த தடை உள்ளது. அவர் பிஜேபியின் அடிமையாக மாறிவிட்டார். அவரை பாஜக முடுக்கி விடுகிறது. இப்படி பேச வேண்டும், அப்படி பேச வேண்டும் என கூறுகிறார்கள். அதன்படி அவர் செயல்படுகிறார் என்றார். மேலும், ஓ.பி.எஸ்.ஸிடம் அதிமுக தொண்டரும் இல்லை, கரைவேட்டி உடுத்த தகுதியும் இல்லை.
 
ஓ.பி.எஸ். உளறி வருவதாக மட்டுமே பொதுமக்களும், தொண்டர்களும் எடுத்துக் கொள்வார்கள். அவருடைய கருத்தை பெரிதாக யாரும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து எங்கள் தலைமை முடிவெடுக்கும். அதனை பொதுச் செயலாளர் வெளியிடுவார். ஒரு மாதத்திற்குள் கூட்டணி தொடர்பான தகவல் வெளியாகும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம். 40 தொகுதிகளையும் பிடிப்போம். அதிமுக தொண்டர்களிடையே எந்த அதிருப்தியும் இல்லை. தொண்டர்கள் அனைவரும் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்.

கடந்த 2021 தேர்தலில் திமுகவுக்கும் எங்களுக்கும் 2.5%  மட்டும் தான் வித்தியாசம். கடந்த தேர்தல் திமுகவுக்கு மகத்தான வெற்றி கிடையாது. ஜஸ்ட் மிஸ்ஸில் அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். தமிழ்நாடு தற்போது போராட்டம், கொலை, கட்ட பஞ்சாயத்து நடக்கும் மாநிலமாக மாறி உள்ளது. கடன் வாங்குவதில் இந்தியாவில் முதலிடம் பெற்றுள்ளது. 2010 -11 திமுக போகும்போது ஒன்றரை லட்சம் கோடி கடன் வைத்து விட்டுதான் சென்றார்கள். பத்தாண்டுகளில் நாங்கள் 3.50 லட்சம் கோடி கடன் வாங்கினோம். அவர்கள் 30 மாதத்தில் மூன்று லட்சம் கோடி வாங்கி உள்ளார்கள்.

திருநெல்வேலி மாநகராட்சியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் எதுவும் இல்லை. எனவே வரும் தேர்தல் அதிமுக மகத்தான வெற்றி பெறும். முதலமைச்சரின் வெளிநாடு சுற்றுப்பயணம் தொடர்பாக முழு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். வெளிநாடு சென்றது முதலீடு செய்யவா? முதலீடு ஈர்க்கவா? என்பதை தெளிவாக சொல்ல வேண்டும். சி ஓட்டர் கருத்துக்கணிப்பில் 39 இடங்களையும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பு வெளியானது குறித்த கேள்விக்கு, அது கருத்துக்கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு என்றார் காட்டமாக.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow