திருமாவளவன் கருத்துக்கு மாணிக்கம் தாகூர் ஆதரவு... திமுக-தவெக ஒரே அணியா?
நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிக்க செல்லும் பயணத்தின் போது தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் நீட் தேர்வை கடுமையாக விமர்சித்தும் திருமாவளவனின் கருத்துக்கும் பதிலளித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திப்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் பேசியாதாவது, கோவை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிக்க செல்ல இருப்பதாக தெரிவித்தார். 5 மாணவிகள் உயிரிழந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வு காரணமாக இது வரை 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு எந்த அக்கறையும் காட்டவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார். நீட் தேர்வை மையமாக கொண்டு 5000 கோடி மதிப்பிலான பயிற்சி மைய தொழில் நடைபெற்று வருவதாகவும் குற்றம்சாட்டினார். சமீபத்தில் நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு ஏற்பட்டது.இது போன்ற சம்பவங்கள் காரணமாக தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் இந்த தேர்வினை ரத்து செய்ய வேண்டியும் ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்.
.பா. ஜ. க. வை எதிர்க்க திமுகவும் தவெகவும் ஒரே அணியில் வர வேண்டும் என்ற திருமாவளவனின் கருத்து தொலைநோக்கு பார்வை கொண்டது என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். சட்டமன்றத்தில் உள்ள எம். எல். ஏ. க்களின் எண்ணிக்கையை மட்டும் வைத்து அரசியலை மதிப்பிடக் கூடாது என்றும், தேசிய அளவில் பா. ஜ. க. வை எதிர்க்கும் ஒற்றுமை அவசியம் என்றும் கூறினார்.
கேரளாவில் கம்யூனிஸ்ட்களும் காங்கிரஸும் அரசியல் ரீதியாக எதிரணியில் இருந்தாலும், பா. ஜ. க. வை எதிர்ப்பதில் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர் என்று குறிப்பிட்ட மாணிக்கம் தாகூர், அதேபோன்ற அரசியல் சூழல் தமிழ்நாட்டிலும் உருவாக வேண்டும் என்றார். தமிழகம் பா. ஜ. க. மற்றும் ஆர். எஸ். எஸ். ஆதிக்கம் இல்லாத மாநிலமாக இருக்க வேண்டும் என்பதே திருமாவளவனின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் கரூரில் நடந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் "தனக்கு மிகுந்த வலி தரக்கூடிய சம்பவம்" என்று கூறியிருப்பது விஜய் ஸ்டைல் என மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டார்.கர்நாடக அரசியல்வாதிகள் மாநில நலன் தொடர்பான விஷயங்களில் ஒன்றுபட்டு செயல்படுவது போல, தமிழ்நாட்டிலும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சட்டமன்றத்தில் காவிரி தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இருந்து எந்தக் கட்சியும் பின்வாங்கக் கூடாது என்றும், விவசாயிகள் பாதுகாப்பு குறித்து அனைத்து தரப்பினரும் ஒன்றாக அமர்ந்து ஆலோசிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் திமுக ஆதரவு நாடி எந்த அரசியல் நடவடிக்கையும் இல்லை என்றும் எந்தக் கட்சி கொண்டு வரும் மசோத்தாக்களுக்கு யார் என்ன நிலைப்பாடு எடுக்கிறார்கள் என்பதே முக்கியம் என்று பேசியுள்ளார்.
What's Your Reaction?

