தேர்தல் களத்தில் சந்திப்போம்...எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்...

"அதிமுகவின் துரோகங்களை எடைபோட்டு பார்த்து மக்கள் தீர்ப்பு அளிப்பார்கள்"

Mar 26, 2024 - 21:15
தேர்தல் களத்தில் சந்திப்போம்...எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்...

திமுகவின் சாதனைகளையும் அதிமுகவின் துரோகங்களையும் மக்கள் எடைபோட்டு பார்த்து தேர்தலில் தீர்ப்பு அளிப்பார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் பரப்புரை கூட்டம் கோவில்பட்டி அருகே நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முதலமைச்சர், தேர்தல் களத்தில் மோதுவோம் என எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுத்தார். எங்களது சாதனைகளையும் உங்களது துரோகங்களையும், சுயநலத்தின் முழு உருவமாக தமிழ்நாட்டின் உரிமைகளை நீங்கள் அடகு வைத்ததையும் பார்த்து மக்கள் தீர்ப்பு அளிப்பார்கள் எனக் கூறினார். பிரதமர் மோடியைப் பற்றி பாசாங்கிற்கு கூட 10 சொற்கள் பேசாத எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டை காக்கப் போகிறாராம் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.


தொடர்ந்து பேசிய முதலமைச்சர், திமுகவைப் பொறுத்தவரை சொல்வதைத் தான் செய்வோம், செய்வதைத் தான் சொல்வோம் எனவும் இந்த வரலாறு தொடர மக்கள் அனைவரும் இந்தியா கூட்டணியை ஆதரிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.  

இதையடுத்து வேட்பாளர்களை எழுப்பி மக்களிடம் வாக்கு கேட்ட முதலமைச்சர், உங்கள் வாக்கு ஜனநாயகத்தை, இந்தியாவை, தமிழ்நாட்டைக் காக்கட்டும் என்று  முழங்கினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow