திமுக எம்.எல்.ஏ மகன் மருமகள் மீதான வழக்கு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு.!

Feb 2, 2024 - 13:14
Feb 2, 2024 - 13:21
திமுக எம்.எல்.ஏ மகன் மருமகள் மீதான வழக்கு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு.!

வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ.-வின் மகன் மற்றும் மருமகள் ஆகியோரின் ஜாமீன் மனு மீது பிப்ரவரி 6-ல்  உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

வீட்டில் வேலைப்பார்த்த பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக, பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மர்லினா   மீது இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு  செய்யப்பட்டது.

இந்த வழக்கு குறித்து இன்று நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அப்போது எம்.எல்.ஏ-வின்  மகன் என்பதால் இந்த விவகாரத்தில் சமூக ஊடகங்களால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக போலீசார் அவசர கதியில் செயல்பட்டுள்ளனர் என  மனுதாரர்கள் தரப்பில் கூறப்பட்டது.

மேலும், இந்த வழக்கில் எஸ்.சி, எஸ்.டி சட்டப்பிரிவு தவறாக பயன்பட்டுள்ளது என்றும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் பக்கம் பெரிய நபர்கள் இருந்திருந்தால் எப்படி இருவரும் கைது செய்யப்பட்டிருப்பார்கள்? எனவும் மனுதாரர்கள் தரப்பில் கேள்வி  எழுப்பப்பட்டது.

இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் உண்மைகள் தெரியவரும் என  பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் போக்சோ பிரிவிலும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும், குற்றம்சாட்டப்பட்டவர்களின் பின்புலத்தில் முக்கிய நபர்கள் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. 

இவ்வாறிருக்க, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் தொடர்பாக இன்னும் விசாரணை நடைபெற்று வருவதாக  காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இறுதியாக அனைத்து தரப்பு வாதங்களையும்  கேட்ட பின்னர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கு மீதான தீர்ப்பை வருகிற 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.   

இதையும் படிக்க  |  கமல்ஹாசனின் ‘அந்த’ 2 நிபந்தனைகளுக்கு உட்பட்டதா.. திமுக?

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow