10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட்.. அரியலூர் டாப்.. கடைசி இடம் பிடித்த வேலூர் - முழு விபரம்

சென்னை: தமிழக அரசின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது.

May 10, 2024 - 10:30
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட்.. அரியலூர் டாப்.. கடைசி இடம் பிடித்த வேலூர் - முழு விபரம்


இன்று வெளியிடப்பட்ட 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின் படி மொத்தம் 91. 55 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் இம்முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

2024ஆம் ஆண்டுக்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்வெழுதிய மொத்த மாணாக்கர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 94 ஆயிரத்து 264. இதில் மாணவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 47 ஆயிரத்து 203. மாணவிகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 47 ஆயிரத்து 61. 

தேர்வெழுதிய மாணவர்களின் 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதன் தேர்ச்சி சதவீதம் 91.55 ஆகும். அதன்படி 3 லட்சத்து 96 ஆயிரத்து 152 மாணவர்களும், 4 லட்சத்து 22 ஆயிரத்து 591 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

வழக்கம்போல் இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிக விகிதத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 88. 58 சதவிகிதம் மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 94 புள்ளி 53.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆயிரத்து 364 அரசுப்பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளன. மேலும் தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 87 புள்ளி 90. அரசு உதவி பெறும் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 91 புள்ளி 77. தனியார் சுயநிதிப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 97 புள்ளி 43.

தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்களில் 96 புள்ளி 85 சதவீத மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் 99 புள்ளி 15 சதவீதம், கணிதத்தில் 96 புள்ளி 78 சதவீதம், அறிவியலில் 96 புள்ளி 72 சதவீதம் மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் 95 புள்ளி 74 சதவீத மாணாக்கர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் தமிழில் 8 மாணாக்கர்களும், ஆங்கிலத்தில் 415, கணிதத்தில் 20 ஆயிரத்து 691, அறிவியலில் 5 ஆயிரத்து 104 மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் 4 ஆயிரத்து 428 மாணாக்கர்களும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்வெழுதிய 13 ஆயிரத்து 510 மாற்றுத் திறனாளி மாணவர்களில் 12 ஆயிரத்து 491 பேர் வெற்றி பெற்றனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய  260 சிறைவாசிகளில் 228 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதன் சதவீதம் 87. 69 ஆகும்.

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.  97.31 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிவகங்கை மாவட்ட மாணவர்கள் இரண்டாம் இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.02 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட மாணவர்கள் 96.36 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று 3ஆம் இடம் பிடித்துள்ளனர்.

கடைசி 5 இடங்களில் கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை வேலூர் மாவட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  86.83 சதவிகிதம் பேரும், திருவள்ளூரில் 86.52 சதவிதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 86.10 சதவிகிதம் பேரும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 85.48 சதவிகிதம் பேரும்,  வேலூரில் 82.07 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow