போதைப்பொருள் கடத்தல்.. ஜாபர் சாதிக் வீட்டில் வைக்கப்பட்ட சீல் அகற்றம்.. குடும்பத்தினர் பயன்படுத்த அனுமதி

டெல்லி சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவினை அடுத்து சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டில் இருந்த சீல் இன்று ( ஏப்ரல் 6) அகற்றப்பட்டது. ஜாபர் சாதிக் சகோதரர் சலீம் மற்றும் ஜாபர் சாதிக் மனைவி ஆகியோர் வீட்டை திறந்து உள்ளே சென்றனர்.

Apr 6, 2024 - 12:09
போதைப்பொருள் கடத்தல்.. ஜாபர் சாதிக் வீட்டில் வைக்கப்பட்ட சீல் அகற்றம்.. குடும்பத்தினர் பயன்படுத்த அனுமதி

டெல்லியில் உள்ள குடோன் ஒன்றில் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில், ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பயன்படுத்த தயாரிக்கப்படும் வேதிப்பொருள் கைப்பற்றப்பட்டது. மேலும், தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். 

அவர்களிடம் நடத்திய விசாரணையில், இதற்கு மூளையாக செயல்பட்டது தமிழகத்தை சேர்ந்தஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது. சினிமா தயாரிப்பாளரான இவர், சென்னை மேற்கு மாவட்ட திமுகஅயலக அணி துணை அமைப்பாளராகவும் இருந்தார். இந்நிலையில், திமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார்

தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை கடந்த மார்ச் 9ஆம் தேதி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே. சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள  ஜாபர் சாதிக் வீட்டில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். மேலும், வீட்டிற்கு சீல் வைத்தும் நடவடிக்கை எடுத்தனர். 

இந்த நிலையில், வீட்டிற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி ஜாபர் சாதிக் தரப்பில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்றைய தினம் (ஏப்ரல்-5) விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் வைத்தது ஏன்? என  மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், சீல் வைத்த வீட்டை அவரது குடும்பத்தினர் பயன்படுத்துவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்தனர். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, சீல் வைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டை அவரது குடும்பத்தினர் பயன்படுத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார். 

டெல்லி சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவினை அடுத்து சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டில் இருந்த சீல் இன்று அகற்றப்பட்டது. 
ஜாபர் சாதிக் சகோதரர் சலீம் மற்றும் ஜாபர் சாதிக் மனைவி ஆகியோர் வீட்டை திறந்து உள்ளே சென்றனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow