‘உறவுகள் இங்கே தான் இருக்கின்றது’ - சொந்த மண்ணில் உருகிய நடிகர் கார்த்தி

என்னுடைய உறவுகள் எல்லாம் இங்கு தான் இருக்கின்றது என மெய்யழகன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி தெரிவித்தார்.

Sep 1, 2024 - 10:59
‘உறவுகள் இங்கே தான் இருக்கின்றது’ - சொந்த மண்ணில் உருகிய நடிகர் கார்த்தி
மெய்யழகன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி பேச்சு

நடிகர் கார்த்தியின் 27-வது படமான ’மெய்யழகன்’ திரைப்படத்தில், அர்விந்த் சாமி, ஸ்ரீ திவ்யா, ராஜ்கிரண், ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்குகிறார். சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்து உள்ளார்.

இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகவுள்ளதால் படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கார்த்தி, ஸ்ரீ திவ்யா, அர்விந்த் சுவாமி, பிரேம்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம் பெற்றுள்ளது. அதில், யாரோ இவன் யாரோ மற்றும் நான் போகின்றேன் எனத் துவங்கும் பாடல்களை உலகநாயகன் கமல்ஹாசன் பாடியுள்ளார். பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், மெய்யழகன் படம் வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகின்றது.

இந்நிலையில் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கார்த்தி, "கல்யாணத்திற்கு பிறகு கோவையில் எனக்கு நடக்கும் முதல் பெரிய நிகழ்ச்சி இதுதான். இந்த ஊருக்கும் எனக்கும் எந்த மாதிரியான சொந்தம் இருக்கிறதோ, அந்த மாதிரியான விஷயத்தை மெய்யழகன் படமும் பேசும்.

அதனால் இந்த ஊரில் நிகழ்ச்சி நடத்தினால்தான் அர்த்தமுள்ளதாக இருக்கும் என நினைத்து இங்கு இசை வெளியீட்டு விழா வைத்துள்ளோம். எங்களின் வேர்கள், உறவுகள் எல்லாம் இங்குதான் இருக்கிறார்கள். அதனால்தான் படத்தின் நிகழ்ச்சியை இங்கு நடத்த வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

96 படத்திற்குப் பின்னர், கிட்டத்தட்ட 6 வருஷத்துக்கு பிறகு பிரேம் இசையமைத்துள்ள படம் இதுதான். ஒரு நல்ல கதையோட வந்த, இந்தப் படத்தை எடுத்துவிடவேண்டும் என்ற தீர்மானத்தோடு செய்தோம். படத்தில் எல்லாம் நன்றாக அமைந்து, படமும் திருப்திகரமாக வந்துள்ளது. படத்தில் அரவிந்த் சுவாமி சாருடன் நடிக்கும்போது அழகியலாக இருந்தது. படம் முழுவதும் நாங்கள் இருவர் இருப்பதால் படம் சிறப்பாக வந்துள்ளது” என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow