”டீ வாங்கிக் கொடுக்கும் சேகர்பாபு.. முதிர்ச்சியின்மை கொண்ட உதயநிதி” - எடப்பாடி பழனிசாமி காட்டம்! 

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுவது அவரது முதிர்ச்சி இன்மையை காட்டுகிறது என்று எடப்பாடி பழனிசாமி காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். 

Oct 17, 2024 - 14:50
Oct 17, 2024 - 14:53
”டீ வாங்கிக் கொடுக்கும் சேகர்பாபு.. முதிர்ச்சியின்மை கொண்ட உதயநிதி” - எடப்பாடி பழனிசாமி காட்டம்! 

அதிமுகவின் 53 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் முன்னாள் முதலமைச்சர்களான எம்ஜிஆர் ,  ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலையிட்டு மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து கட்சிக் கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றிய அவர்,  தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ”குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தல் சென்னை உட்பட பல மாவட்டங்களில் அதி கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியது. சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுத்திருந்தனர்.. இன்றும் கூட அதி கன மழை பெய்யும் என்றனர் , ஆனால் வெயில்தான் பிரகாசமாக அடிக்கிறது. 

குறைந்த மழைப்பொழிவிலும் சென்னையில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி தத்தளித்தது. மக்கள் பாதிக்கப்படவில்லை என முதல்வர் , துணை  பொய்யான தகவலை கூறினர்.

20 செ.மீ மழை பெய்தாலும் கூட ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காது என முதல்வர், அமைச்சர்கள், சென்னை மேயர் கூறினர். இன்று உண்மை நிலை வெளிவந்துவிட்டது. 

அதிமுக ஆட்சியில் உலக வங்கி, ஜெர்மன் வங்கி போன்றவற்றிடம் நிதி பெற்று சென்னையில் 2400 கி.மீ தூரத்திற்கு மழை நீர் வடிகால் பணி தொடங்கியது. ஆட்சி முடிவுறும்போது 1240 கி.மீ நீளத்திற்கு கால்வாய் பணிகளை நிறைவு செய்தோம். 

எஞ்சிய பணிகளை இந்த ஆட்சியில் நிறைவு செய்யவில்லை. நாங்கள் மேற்கொண்ட மழைநீர் வடிகால் பணியை உடனடியாக நிறைவேற்றியிருந்தால் இன்று மழை வெள்ளம் தேங்கி இருக்காது” என்று தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், “கூவம் , அடையாறில் கரையோரம் இருந்த 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை புதிய கட்டடம் கட்டி வேறு இடங்களுக்கு குடியேற்றினோம். 40 கி.மீ நீளம் கொண்ட 30 நீர் நிலைகளை  எங்கள் ஆட்சியில் தொடர்ந்து தூர்வாரினோம்... ஆனால் திமுக அரசு நீர்நிலைகளை முறையாக தூர்வாரவில்லை.

ஸ்டாலின் தலைமையிலான அரசு வெள்ள நீர் தேங்காமல் இருப்பதற்கான பரிந்துரைகளை வழங்க திருப்புகழ் கமிட்டியை அமைத்தனர். திருப்புகழ் கமிட்டியின் பரிந்துரைகள் குறித்தும், அவை  நிறைவேற்றப்பட்டனவா என்பது குறித்தும் அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை. 

தற்போது பெய்த மழையில் சென்னையில் வெள்ளநீர்  தேங்காததே நாங்கள் வெள்ளை அறிக்கை கேட்டதற்கான  பதில் என துணை முதல்வர் கூறியது அவரது முதிர்ச்சி இன்மையை காட்டுகிறது. விளையாட்டுத்தனமாக பேசுகிறார் அவர். மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதாலேயே வெள்ளை அறிக்கை கேட்கிறோம்.

கனமழை தொடர்ந்து பெய்திருந்தால் யாரும் வெளியில் சென்றிருக்க முடியாது. கன மழை இல்லாததால் சென்னையில் வெள்ளநீர் வடிந்து விட்டது.  அதிமுக ஆட்சியில் இருந்தது போல் தற்போதைய அமைச்சர்களிடம் பணிகள் பகிர்ந்தளிக்கப்படவில்லை. அனைத்து அமைச்சர்களின் பணிகளையும் துணை முதலமைச்சரே செய்கிறார்.

மாநகரம் , மின்சாரம், சுகாதாரம்,  வருவாய் , பொதுபபணி , நீர்வளம் என அனைத்து துறைகளின் பணியையும் உதயநிதியே செய்கிறார். மூத்த அமைச்சர்கள் இருக்கும்போது ஸ்டாலின் குடும்பத்தில் இருந்து வந்த உதயநிதியை மட்டும்  முன்னிலைப்படுத்துவது ஏன்..? மற்ற அமைச்சர்களை முன்னிலைப்படுத்தி இருந்தால் வெள்ள நிவாரண பணிகள் விரைவாக முடிந்திருக்கும்.

திமுவினர் 98 சதவீத வடிகால் பணி நிறைவடைந்ததாக கூறினர். மழைநீர் வடிகால் பணி நிறைவடையாதது குறித்து கேட்டால் இன்றும் சாக்குபோக்குதான் கூறுகின்றனர். இன்னும் 15, 16 மாதம்தான் திமுக ஆட்சி இருக்கிறது. எப்படி புதிய பணிகளை நிறைவேற்றுவார்கள். அடையாறு , கோவளம் , கொசஸ்தலை ஆறு வடிகால் திட்டங்களை நாங்கள் செயல்படுத்தினோம்.

5 ஆண்டு சென்னை மேயராக இருந்து ஸ்டாலின் செய்தது என்ன..? உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோதும் மழைநீர் வடிகால் பணிகளை ஸ்டாலின் மேற்கொள்ளவில்லை. திருப்புகழ் கமிட்டியின் அறிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

அமைச்சர் சேகர்பாபு டீ தான் வாங்கி கொடுத்து கொண்டிருக்கிறார் . தூய்மைப் பணியாளர்களுக்கு  டீ வாங்கி கொடுத்துவிட்டு முதலமைச்சரை அனுப்பி வைக்கும் வேலையை எல்லாம் அதிமுக ஆட்சியில் நாங்கள் செய்ததில்லை. 

தானே , ஒக்கி ,வர்தா , கஜா என பல  புயல்களின்போது புயல் போல் பணியாற்றினோம் நாங்கள் . பலரின் வயிற்றில் அடித்த அரசுதான் திமுக அரசு. வெறும் டீ வங்கி கொடுப்பதால் மக்களுக்கு பயனில்லை” என்று எடப்பாடி பழனிசாமி காட்டமான விமர்சனத்தை முன்வைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow