பரந்தூர் விமான நிலையம்: 'வளர்ச்சியை தடுக்காதீர்கள்'... விஜய் அரசை விமர்சித்த நயினார் நாகேந்திரன்
பரந்தூர் விமான நிலையம் திட்டத்தை காலதாமதமின்றி உடனடியாகத் தொடர மத்தி அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசை நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பதிவில், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கும் முட்டுக்கட்டை போடும் வகையில் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை முடக்கும் முயற்சியில் ஜோசப் விஜய் அரசு இறங்கி உள்ளது. மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் விரிவான ஆய்வுகளுக்குப் பின் முறைப்படி அனுமதி பெற்ற ஒரு திட்டத்திற்கு ஓடுதளம் அமைக்க முடியாது என்று தவெகவின் அமைச்சர் நிர்மல்குமார் கூறியிருப்பது அப்பட்டமான பொய். மேலும் இது தமிழகத்தின் எதிர்காலத்துக்கு செய்யும் துரோகமாகும்.
அமைச்சர் நிர்மல் குமார் அவர்களே, இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவை விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு பின் நீர்நிலைகளைக் கணக்கில் கொண்டுதான் கொள்கை அளவிலான அனுமதியை வழங்கின என்பது உங்களுக்குத் தெரியாதா?
தொழில்நுட்ப நிபுணர்கள் நீர்நிலைகளைப் பாதுகாத்து ஓடுதளம் அமைப்பதற்கான பொறியியல் தீர்வுகளைப் பரிந்துரை செய்த பின் இப்போது திடீரெனப் புதிய சிக்கலை உருவாக்குவது ஏன்? இது உண்மையான தொழில்நுட்பப் பிரச்சனையா? அல்லது உங்கள் கட்சியின் மலிவான ஓட்டு வங்கி அரசியலுக்காக மாநிலத்தின் வளர்ச்சியைப் பலியிடும் செயலா? இட நெருக்கடி காரணமாக சென்னை விமான நிலையத்தை மேலும் விரிவுபடுத்த முடியாத நிலையில் இத்திட்டத்தை தாமதப்படுத்துவது தமிழகத்தின் சர்வதேச வர்த்தக வாய்ப்புகளைப் பறித்துவிடும்.
எனவே பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் காலதாமதமின்றி உடனடியாகத் தொடர மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று தன்னுடைய எக்ஸ் வலைத்தளப் பதிவில் பதிவிட்டுள்ளார்.
What's Your Reaction?