எடப்பாடி ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த அதிமுக எம்எல்ஏக்கள்... பனையூருக்கு பயணமா?

அதிமுகவின் ஒசூர் எம்எல்ஏ பாலகிருஷ்ண ரெட்டி தனது பதவியை பறிக்கப்பட்டதாக கூறி  இன்றைக்கு நடந்த  அதிமுகவின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளார். 

Jul 9, 2026 - 12:37
எடப்பாடி ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த அதிமுக எம்எல்ஏக்கள்... பனையூருக்கு பயணமா?

சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததை தொடர்ந்து அந்த கட்சியில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் ஆகியோர் தொடர்ந்து அதிமுகவை விட்டு விலகி தவெகவில் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 3 ஆம் தேதி முதல் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார்.  6 ஆம் நாளான இன்று காலை 10 மணி  அளவில் நடைபெற்ற கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் ஓசூர் தொகுதியின் எம்எல்ஏவான பாலகிருஷ்ண ரெட்டி பங்கேற்காதது அதிமுகவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சி.வி சண்முகம், எஸ்.பி வேலுமணி ஆகியோர் தனி அணியாக ஆலோசனை கூட்டங்களை நடத்திய போது அவர்களுடன் பாலகிருஷ்ண ரெட்டி இணைந்து செயல்பட்டு வந்தார். இதைத் தொடர்ந்து அவரது மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு அமைப்பு செயலாளர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.

இதற்கிடையில் தனது மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டதால் அதிருப்தி காரணமாகவே பாலகிருஷ்ண ரெட்டி எம்எல்ஏ இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பழனிசாமி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற  கூட்டத்தில் ஆற்காடு தொகுதி எம்எல்ஏவான எஸ்.எம். சுகுமார், திருப்பத்தூர்  தொகுதி எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி ஆகியோரும் பங்கேற்காமல் புறக்கணித்து உள்ளனர்.

தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுகவிலிருந்து பலரும் விலகி வரும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து தொடர்ந்து ஆலோசனை கூட்டங்களை நடத்திய நிலையில், அந்த கூட்டங்களில் அதிமுக முன்னணி நிர்வாகிகள் கலந்து கொள்ளாதது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே 6 எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்த நிலையில் எடப்பாடி நடத்திய கூட்டத்தை புறக்கணித்திருப்பது அவர்கள் கட்சி மாறப்போகிறார்களா?  தவெகவில் இணைய போகிறார்களா? பனையூரை நோக்கி படையெடுக்க காத்திருக்கிறார்களா? என்று பல கேள்விகள் எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டம் நிறைவடைந்ததும் தர்மபுரி மாவட்ட நிர்வாகிகளுடம் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து 6 நாட்களாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. ஒவ்வொரு நாளும் நடைபெற்ற கூட்டங்களிளெல்லாம் பேசிய எடப்பாடி அதிமுகவுக்கு நல்ல எதிர்காலம்  இருக்கின்றது. விலகி செல்பவர்களை பற்றி யாரும் கவலை பட வேண்டாம் என்று அவர் பேசுவது குறிப்பிடத்தக்க ஒன்று.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow