மீண்டும் ‘செந்தில்பாலாஜி எனும் நான்’... என்ன துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தெரியுமா?

பணமோசடி வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளியில் வந்துள்ள செந்தில்பாலாஜி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். 

Sep 29, 2024 - 17:26
மீண்டும் ‘செந்தில்பாலாஜி எனும் நான்’... என்ன துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தெரியுமா?

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகிறார் என ஆளுநர் மாளிகை அறிவித்ததை அடுத்து, தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட்டன. நிதி மற்றும் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். 

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு வனத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு, பால் வளத்துறை வழங்கப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜுக்கு மனிதவள மேம்பாட்டுத் துறை வழங்கப்பட்டுள்ளது. 

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியில் வந்துள்ள செந்தில்பாலாஜியும் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், செந்தில்பாலாஜியுடன் சேர்ந்து சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ ராஜேந்திரன், திருவிடைமருதூர் தொகுதி எம்.எல்.ஏ கோவி. செழியன் மற்றும் ஆவடி தொகுதி எம்.எல்.ஏ. நாசர் ஆகியோர், இன்று ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். 

இதனைத் தொடர்ந்து, புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களின் இலாகாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை வழங்கப்பட்டுள்ளது. கோவி செழியனுக்கு உயர்கல்வித்துறை, ஆவடி நாசருக்கு சிறுபான்மையினர் நலத்துறை, சேலம் ராஜேந்திரனுக்கு  சுற்றுலாத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

புதிதாகப் பதவியேற்ற அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் பூங்கொத்து வழங்கி அமைச்சர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். 

தமிழக அமைச்சரவை தற்போது 5வது முறையாக மாற்றி அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow