தமிழக மீனவர்கள் 32 பேர் கைது - இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்...

கடந்த ஒரே வாரத்தில் மட்டும் தமிழக மீனவர்கள் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Mar 21, 2024 - 14:01
தமிழக மீனவர்கள் 32 பேர் கைது - இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்...

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் மீனவ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது நீடித்து வருகிறது. இதனை தடுக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர் கதையாகவே உள்ளன. 

இந்த நிலையில், ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் இருந்து 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று (மார்ச் 20) வங்கக் கடலில் மீன் பிடிக்க சென்றனர். அவர்களில் ராமேஸ்வரத்தை சேர்ந்த 25 பேர் 3 விசைப் படகுகளில் நெடுந்தீவு கடற்பகுதியில் இன்று (மார்ச் 21)  மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை, எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்கள் அனைவரையும் கைது செய்தது. 
 
இதேபோல், மன்னார் கடற்பகுதியில் 2 விசைப் படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 7 பேரையும் இலங்கை கடற்படை கைது செய்தது. 

கடந்த ஒரே வாரத்தில் மட்டும் தமிழக மீனவர்கள் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள்  வேதனை தெரிக்கின்றனர். எனவே கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow