செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பு!

குற்றப்பத்திரிகைக்கு ஒப்புதல் மற்றும் சிலரை விசாரிப்பது தொடர்பாக அரசின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை

Dec 14, 2023 - 14:45
Dec 15, 2023 - 17:26
செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு அரசின் ஒப்புதலுக்காக  காத்திருப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி எதிராக போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கின் கூடுதல் குற்றபத்திரிக்கை அரசின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளதாக மத்திய குற்றபிரிவு காவல்துறை தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, அத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் உள்ளிட்ட மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த 2015 ஆண்டு வழக்குகளை பதிவு செய்தனர்.இந்த வழக்கு சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கில் இருந்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோரை விடுவித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், வழக்கை செப்டம்பர் 30 தேதிக்குள் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு உத்தரவிட்டது.

இதனையடுத்து விசாரணை நடத்திய மத்திய குற்றபிரிவு காவல்துறை, செந்தில் பாலாஜிக்கு எதிராக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.அப்போது இந்த வழக்கில் குற்றம்சாட்டபட்ட இன்னும் சிலரை விசாரிக்க அனுமதி மற்றும் ஒப்புதல் கடிதம் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜெயவேல் முன்பு இன்று (டிச 14) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கூடுதல் குற்றப்பத்திரிகைக்கு ஒப்புதல் மற்றும் சிலரை விசாரிப்பது தொடர்பாக அரசின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.இதனையடுத்து வழக்கு விசாரணை ஜனவரி 3 தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow