என்ன பாவம் செய்தார்கள் குழந்தைகள்..? தந்தையின் சந்தேகப் புத்தி... வீடு திரும்பிய மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

May 11, 2024 - 13:49
என்ன பாவம் செய்தார்கள் குழந்தைகள்..? தந்தையின் சந்தேகப் புத்தி... வீடு திரும்பிய மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

சென்னையில் குழந்தைகளை கொலை செய்துவிட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மேற்கு மாம்பலம் கிருஷ்ணப்ப நாயக்கன் தெருவை சேர்ந்தவர் மோகன். இருவருக்கும் யமுனா என்பவருக்கும் திருமணமாகி 13 வயதில் சாய் ஸ்வாதி என்ற மகளும், 5 வயதில் தேஜஸ் என்ற மகளும் உள்ளனர். மோகன் தனியார் நிறுவனத்திலும் - யமுனா தனியார் பிரிண்டிங் பிரஸிலும்  வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் மனைவி யமுனாவின் நடத்தையில் மோகனுக்கு திடீரென சந்தேகம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் தினமும் வீட்டில் தகராறு ஏற்பட்டு யமுனாவை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் மோகனின் துன்புறுத்தல்களை தாங்க முடியாத யமுனா, சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் கணவர் மீது புகாரும் அளித்துவிட்டு, குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார்.  

இதனிடையே கடந்த மாதம் மோகன் மற்றும் அவரது குடும்பத்தினர் யமுனாவுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் சேர்த்து வைத்திருக்கின்றனர். இல்லற வாழ்க்கை சுமூகமாக சென்று கொண்டிருந்த நிலையில், மீண்டும் அவர்களுக்குள் மோதல் வெடிக்கத் தொடங்கியுள்ளது. 

இந்த நிலையில் நேற்று யமுனா வழக்கம் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது வீட்டின் கதவு உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. கதவைத் திறக்குமாறு கூறி எவ்வளவு கத்தியும் உள்ளே இருந்து எந்த சத்தம் வரவில்லை. உடனடியாக யமுனா அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கணவர் மோகன் தூக்கில் தொங்கியபடியும், மகள் சாய் ஸ்வாதி கழுத்து அறுக்கப்பட்டும், மகன் தேஜஸ் கழுத்து நெரிக்கப்பட்டும் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குமரன் நகர் போலீசார், 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

முதற்கட்ட விசாரணையில், நேற்று முன்தினம் மோகனுக்கும் – யமுனாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாகவும் இதனால் மன உளைச்சலில், மோகன் இந்த விபரீத முடிவை எடுத்ததும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow