பொதுக் கூட்டங்கள், ரோடு ஷோக்களுக்கு இறுதி வழிகாட்டு நெறிமுறைகள்: ஜன.5-க்குள் வெளியிட அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ஜனவரி 5ம் தேதிக்குள் அரசியல் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோவுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வகுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 27ல், கரூரில் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இதையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அரசியல் கட்சித் தலைவர் களின் ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு, எஸ்.ஓ.பி., எனும் நிலையான வழிகாட்டு விதி முறைகளை வகுக்கக் கோரியும், பல்வேறு தரப்பில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், 23 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், 40-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் கருத்துகளைப் பெற்று, பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோக்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது தமிழக அரசு.
இந்த வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அதிமுக, தவெக மற்றும் தேசிய மக்கள் சக்திக் கட்சி சார்பில் ஆலோசனைகளும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அரசியல் கட்சிகளின் ஆலோசனைகள் பரிசீலிக்கப்படும் என, அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வழக்கில் விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தது, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, இன்று தீர்ப்பளித்தது.
What's Your Reaction?

