சதத்தை தவறவிட்ட துருவ் ஜூரல் - 307 ரன்களுக்கு இந்தியா ஆல்-அவுட்

Feb 25, 2024 - 12:29
சதத்தை தவறவிட்ட துருவ் ஜூரல் - 307 ரன்களுக்கு இந்தியா ஆல்-அவுட்

இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 307 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4ஆவது டெஸ்ட் போட்டி, ஜார்கண்டில் உள்ள ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 353 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. ஜோ ரூட் 122 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் அதிகப்பட்சமாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்-க்கு இது அறிமுக போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. அறிமுகப் போட்டியில் விளையாடிய ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சதத்தை தவறவிட்ட இந்திய வீரர் துருவ் ஜூரல்

பின்னர் களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ரோஹித் சர்மா 2 ரன்களிலும், சுப்மன் கில் 38 ரன்களிலும், ராஜட் படிதர் 17 ரன்களிலும், ஜடேஜா 12 ரன்களிலும் வெளியேறினர். இங்கிலாந்து பந்துவீச்சு தாக்குதலை சமாளித்து ஆடிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 73 ரன்கள் எடுத்த்து வெளியேறினார். இதனால், நேற்று [24-02-24] இரண்டாவது நாள் முடிவில் 219 ரன்களுக்கு 7 விக்கெட் என்ற நிலையில் இருந்தது. துருவ் ஜூரல் 30 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

5 விக்கெட்டுகளை கைப்பற்றிய இங்கிலாந்து வீரர் சோயப் பஷிர்

தொடர்ந்து 3ஆவது நாளில் விளையாடிய இந்திய அணியின் துருவ் ஜூரல் அரைச்சதம் அடித்தார். குல்தீப் யாதவ் 28 ரன்களிலும், முஹமது சிராஜ் 9 ரன்களிலும் வெளியேறினார். இங்கிலாந்தின் பந்துவீச்சை நேர்த்தியாக ஆடிய துருவ் ஜூரல், சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 90 ரன்களில் அவுட் ஆக இந்திய அணி 307 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் சோயப் பஷிர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 46 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow