கோடநாடு கொலை கொள்ளை வழக்கு -எடப்பாடி பழனிசாமியிடம் பதிவு செய்யப்பட்ட சாட்சியம் பதிவுகள் தாக்கல்

நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு வழக்கறிஞர் கார்த்திகை பாலன் பதிவு செய்த சாட்சியம் பதிவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

Jan 12, 2024 - 22:13
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு -எடப்பாடி பழனிசாமியிடம் பதிவு செய்யப்பட்ட சாட்சியம் பதிவுகள் தாக்கல்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் பதிவு செய்யப்பட்ட சாட்சியம் பதிவுகளை நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு வழக்கறிஞர் கார்த்திகை பாலன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஜனவரி 04 உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு வழக்கறிஞர் காரத்திகை பாலன் சாட்சியம் பதிவு செய்தார்.கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால்,அந்த வழக்கு தொடர்பாக அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. 

இதனையடுத்து, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதின்றத்தில் மனுதாக்கல் செய்தார். 

அதில், 2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக கட்சிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை குலைக்கும் நோக்கத்தில், தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலால் தனபால் இதுபோல் பேட்டிகள் அளித்து வருவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை  தொடர்புபடுத்தி பேச, கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டு, இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது எனவும்,  தமது வீட்டில் சாட்சியத்தை பதிவுசெய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டுமெனவும் கோரி எட்பபாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று வழக்கறிஞர் ஆணையராக வழக்கறிஞர் எஸ். கார்த்திகை பாலன் என்பவரை நியமித்து, 1 மாதத்திற்குள் சாட்சிகளை பதிவு செய்து முடிக்க வேண்டுமென உத்தரவிட்டு அறிக்கையாக ஜனவரி 12ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார். 

இதையடுத்து, உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு வழக்கறிஞர் கார்த்திகை பாலன், சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் ஜனவரி 04ம் தேதி சாட்சியம் பதிவு செய்தார்.இந்நிலையில் இந்த வழக்கை நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு வழக்கறிஞர் கார்த்திகை பாலன் பதிவு செய்த சாட்சியம் பதிவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி பிப்ரவரி 01ம் தேதிக்கு தள்ளிவைத்தார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow