போதைப் பொருள் பயன்படுத்தினாரா பிசாசு பட நடிகை?

கொச்சியில் நடத்தப்பட் போதைப் பொருள் பார்ட்டியில் கலந்து கொண்டதாகவும் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி மற்றும் நடிகை பிரயாகா மார்டின் ஆகியோர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருக்கின்றனர். 

Oct 9, 2024 - 17:06
போதைப் பொருள் பயன்படுத்தினாரா பிசாசு பட நடிகை?
Prayaga Martin

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பிரபல நட்சத்திர விடுதி ஒன்றில் சில தினங்களுக்கு முன்பு போதைப்பொருள் பார்ட்டி நடப்பதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இத்தகவலை அடுத்து காவல் துறையினர் அந்த விடுதியைச் சுற்றி வளைத்து. அந்த போதைப் பொருள் பார்ட்டியை நடத்திய குற்றவாளி ஓம் பிரகாஷ் மற்றும் அவரது கூட்டாளியான சிகாஷ் ஆகியோரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து போதைப் பொருட்களோடு, உயர் ரக மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.  ஓம் பிரகாஷ் மீது ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட வழக்குகள்  நிலுவையில் உள்ள நிலையில் காவல் துறையினர் ஓம் பிரகாஷைக் கைது தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் ஓம் பிரகாஷ் வெளிநாட்டில் இருந்து போதைப் பொருட்களை கடத்தி வந்து சினிமா மற்றும் அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள பிரபலங்களுக்கு விற்பனை செய்து வந்தது கண்டறியப்பட்டது. போதைப் பொருள் விற்பனைக்குப் புதியவர்களை ஈர்ப்பதற்காக ஓம் பிரகாஷ், அந்த நட்சத்திர விடுதியில் போதைப் பொருள் பார்ட்டியினை நடத்திய நிலையில், அந்தப் பார்ட்டியில் சினிமா நடிகர்கள் உள்ளிட்ட 20 பேர் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. 

போதைப்பொருள் பார்ட்டி குறித்து கேரள காவல் துறையினர் நடத்திய விசாரணைக்குப் பிறகு ரிமாண்ட் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மலையாளத்தில் நடிகர் ஸ்ரீநாத் பாசி மற்றும் நடிகை பிரயாகா மார்டின் உள்ளிட்டோரது பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றனர். ஸ்ரீநாத் பாசி தமிழ்நாட்டில் பெரிய வெற்றி பெற்ற மலையாளப்படமான ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். பிரயாகா மார்டின் பிசாசு திரைப்படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடித்திருந்தார். 

இவர்கள் அந்த விடுதியில் தங்கி இருந்த ஹோட்டல் அறையில் போதைப் பொருள் இருந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விடுதியின் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. 

ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு மலையாளத் திரை உலகமே பரபரப்புடன் இருக்கும் நிலையில் மற்றுமொரு அதிர்ச்சியாய் இது விளங்குகிறது. போதைப் பொருள் பயன்படுத்தியதாக தன் மீது எழுந்துள்ள புகாருக்கு நடிகை பிரயாகா மார்ட்டின் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “ஓம் பிரகாஷைத் தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரியாது. நண்பர்கள் சிலரைப் பார்ப்பதற்காக அந்த விடுதிக்குச் சென்றேன். அதன் பிறகு கோழிக்கோட்டில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காகச் செல்ல வேண்டி இருந்தது. ஆகவே அந்த விடுதி அறையில் இரண்டு மணி நேரம் ஓய்வெடுத்தேன். மற்றபடி போதைப் பொருள் பயன்படுத்தியதாக இந்த விவகாரத்தில் என்னை இணைத்துப் பேசுவது ஏற்புடையதல்ல” என்று கூறியிருக்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow