செந்தில் பாலாஜிக்கு 25-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு… மார்ச் 13 வரை சிறையிலடைக்க உத்தரவு

காணொலிக் காட்சி மூலம் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜரானார் செந்தில்பாலாஜி.

Mar 11, 2024 - 17:25
செந்தில் பாலாஜிக்கு 25-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு… மார்ச் 13 வரை சிறையிலடைக்க உத்தரவு

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 25-வது முறையாக நீட்டித்து மூன்றாவது கூடுதல் அமர்வு  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து கடந்தாண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு எதிராக 3000 பக்க குற்றப்பத்திரிகை அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஜாமின் கோரி பலமுறை செந்தில் பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு, நிராகரிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்த செந்தில் பாலாஜி, கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி தமது அமைச்சரவைப் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார். இதற்கிடையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரது நீதிமன்றக் காவல் இன்றுடன் (மார்ச் 11) முடிவடைந்தது. இதையடுத்து புழல் சிறையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.வி..ஆனந்த் முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். 

இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மார்ச் 13-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் 25வது முறையாக அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow