செந்தில்பாலாஜி வழக்கு..! ED பதிலளிக்க சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு !
அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை மார்ச் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்ட சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கு தொடர்பாக, கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்காக அவரை பிப்ரவரி 16ம் தேதி நேரில் ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டிருந்த நிலையில், அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி அமர்வு நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனால் குற்றச்சாட்டு பதிவு செய்யும் நடைமுறை மேற்கொள்ளப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரமில்லை எனவும் தன்னை விடுவிக்கக் கோரிய மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை குற்றச்சாட்டுகள் பதிவை தள்ளி வைக்கவும் வேண்டும் எனவும் செந்தில்பாலாஜி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இம்மனு சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி D.V.ஆனந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை மார்ச் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
What's Your Reaction?






