தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு இழப்பீடு வழங்கக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு
சம்பவத்தின் நினைவாக நினைவிடம் அமைக்க 20 லட்சம் ரூபாயை விடுவிக்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும்
![தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு இழப்பீடு வழங்கக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு](https://kumudam.com/uploads/images/202401/image_870x_6597dbb50c05d.jpg)
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகளுக்கு எதிராக கொலை வழக்குப்பதிவு செய்யக்கோரியும், பலியானோர் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரியும், துப்பாக்கிச் சூட்டில் பலியான இளம்பெண்ணின் தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் தேதி நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், கடந்த 2022ம் ஆண்டு மே 18ம் தேதி தனது அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தது.
அதில், இந்த சம்பவத்துக்கு காரணமான 17 காவல்துறையினர், மாவட்ட ஆட்சியர் உள்பட வருவாய் துறையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், இழப்பீட்டை அதிகரித்து வழங்கவும் பரிந்துரைத்திருந்தது.ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக்கொண்ட அரசு, அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டும் எடுப்பது எனவும், ஏற்கனவே வழங்கப்பட்ட தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடே போதுமானது எனவும் கூறி, கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி அரசாணை பிறப்பித்தது.
இந்த அரசாணையை எதிர்த்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான 17 வயது இளம் பெண் ஸ்னோலின் என்பவரின் தாய் வனிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைத்தும், அமைதியான முறையில் போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மீது கொலை குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் நடவடிக்கை எடுத்து சட்டமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என ஐந்து ஆண்டுகள் காத்திருந்த நிலையில், சட்ட விதிகளுக்கு முரணாக அரசு, இயந்திரத்தனமாக செயல்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தப்பட்டதாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரைப்படி காவல் துறையினர், வருவாய் துறையினர் மீது கொலை வழக்கு பதியவும், பலியானோர் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தியதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மட்டும் எடுக்கும் வகையில் தமிழக அரசு 2022 அக்டோபரில் பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்,அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும், சம்பவத்தின் நினைவாக நினைவிடம் அமைக்க 20 லட்சம் ரூபாயை விடுவிக்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, விசாரணையை பிப்ரவரி 21ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
What's Your Reaction?
![like](https://kumudam.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudam.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudam.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudam.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudam.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudam.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudam.com/assets/img/reactions/wow.png)