தமிழகத்தில் விசில் புரட்சி: எம்ஜிஆர் 2.0, புதிய வரலாறு படைத்த விஜய்
தமிழகத்தில் விசில் புரட்சி ஏற்படும். 1977 வரலாறு மீண்டும் திரும்பும் என தவெக தலைவர் விஜய் பேசினார். அதனை மெய்ப்பிக்கும் வகையில் விசில் சின்னத்தில் தங்களது அமோக ஆதரவை அளித்து தவெகவிற்கு வெற்றி தேடி தந்துள்ளனர்.
2024-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை விஜய் தொடங்கினார். அந்த ஆண்டே நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவில்லை. 2026 சட்டமன்ற தேர்தல் மட்டுமே இலக்கு என விஜய் கூறி வந்தார். சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற இடங்களில் எல்லாம் விஜய் பேசும் போது “கான்ஃபிடென்ட்டா இருங்க” வெற்றி நிச்சயம் என பேசி வந்தார்.
அதுமட்டுமின்றி, விசில் புரட்சி ஏற்படும் என்றும், 1977ம் ஆண்டு எம்ஜிஆர் ஏற்படுத்திய அரசியல் மாற்றத்தை தவெக ஏற்படுத்தும் என தொடர்ந்து அக்கட்சியின் நிர்வாகி ஆதவ் அர்ஜூனா பேசி வந்தார். அதை போலவே எம்ஜிஆர் போன்று விஜய் தமிழக அரசியலில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.
விஜய் தனது முதல் மாநாட்டிலும் எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்தபோது எப்படி முதல்முறை தேர்தலில் வெற்றி பெற்றாரோ, அதேபோல், வரலாறு திரும்புகிறது. நாமும் ஆட்சி அமைப்போம் என்று பேசினார். அதேபோல், எம்ஜிஆருக்கு கிடைத்தது போன்ற ஆதரவு விஜய்க்கும் கிடைத்ததுள்ளது. போட்டியிட்ட முதல் தேர்தலில் 100 தொகுதிகள் தாண்டி விஜயின் தவெக வெற்றி பெற்றுள்ளது. சந்தித்த முதல் தேர்தலில் மதியம் 3 நிலவரப்படி 1 கோடி வாக்குகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
எம்ஜிஆரின் 30.4 சதவீத சாதனையை கட்சி துவங்கி இரண்டரை ஆண்டில் முதல் தேர்தலில் தகர்த்து சாதித்துள்ளார் விஜய். தற்போது வரை 35 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது. இந்த வாக்குசதவிகிதம் 40 சதவிகிதத்தை தாண்டும் எனவும் தெரிகிறது. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
What's Your Reaction?