சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு... யாருக்கு வாய்ப்பு..? யார் புறக்கணிப்பு..?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் மக்களவைத் தேர்தலில் மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Mar 15, 2024 - 18:05
சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு... யாருக்கு வாய்ப்பு..? யார் புறக்கணிப்பு..?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் மக்களவைத் தேர்தலில் மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.  கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, நேர்காணல் என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  தமிழ்நாட்டில் திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தியது.

கடந்த பிப்ரவரி 29-ம் தேதி திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே தொகுதிப் பங்கீடு கையெழுத்தான நிலையில்,  ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகள் எவை என அடையாளம் காண்பது தொடர்பான ஆலோசனை மார்ச் 12 ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  திமுக குழு,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்,  சிபிஎம் குழுவினர் இதில் கலந்துகொண்டனர். அப்போது,  மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை தொகுதியில் எம்.பி. சு.வெங்கடேசனும், திண்டுக்கல் தொகுதியில் சச்சிதாநந்தமும் போட்டியிடுவார்கள் என அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

திண்டுக்கல் தொகுதியில் வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பாண்டி, பாலபாரதி, மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளரும், வாச்சாத்தி வழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க தொடர்ந்து போராடி வந்த பெ.சண்முகம் ஆகியோரில் ஒருவர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சச்சிதாநந்தம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow