கிளாம்பாக்கம் பிரச்னை எப்போது தீரும்; சென்னை முழுக்க போராட்டம் வெடிக்கும் - அண்ணாமலை

பொதுமக்களைத் தொடர்ந்து அவதிக்குள்ளாக்கினால், சென்னை முழுக்க மிகப் பெருமளவில் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கை

Feb 10, 2024 - 12:26
Feb 10, 2024 - 14:32
கிளாம்பாக்கம் பிரச்னை எப்போது தீரும்; சென்னை முழுக்க போராட்டம் வெடிக்கும் - அண்ணாமலை

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் வரை கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயங்க அனுமதிக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியிருக்கிறார்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் திறக்கப்பட்டது. பல்வேறு வசதிகளுடன் கூடிய இந்த பேருந்து முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அரசு விரைவு பேருந்து, தனியார் ஆம்னி பேருந்துகள் என அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நாளை (பிப்.11) முகூர்த்த நாள் என்பதால் நேற்றிரவு சொந்த ஊர்களுக்கு செல்ல பயணிகள் கிளாம்பாக்கத்தில் குவிந்தனர். ஆனால் திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லாததாலும், இருந்த பேருந்துகளில் முன்பதிவு செய்யப்பட்டதாலும் பயணிகள், நடத்துநர், ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் பயணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில், கிளாம்பாக்கத்தில் பயணிகளின் போராட்டம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகளால், பொதுமக்கள் அவதிக்குள்ளாவது தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று குற்றம்சாட்டியிருக்கிறார். கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்திருக்கும் இடத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, எந்த வித ஏற்பாடுகளும் செய்யாமல், அவசரகதியில் பேருந்து முனையத்தை சுமார் 40 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கிளாம்பாக்கத்துக்கு திமுக அரசு மாற்றியிருப்பதாகவும் சாடியிருக்கிறார். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை திறந்து 40 நாட்கள் கடந்தும், இன்னும் பயணிகள் தினம் தினம் எதிர்கொள்ளும் பிரச்னைகளைத் தீர்க்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில், நேற்றைய தினம் இரவு, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்குச் செல்வதற்காக, சென்னையின் பல பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வந்த பயணிகள், ஊருக்குச் செல்லப் பேருந்துகள் இல்லாமலும், இருந்த ஒன்றிரண்டு பேருந்துகளும் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்ததால் பயணிக்க முடியாமலும் நள்ளிரவில் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். குழந்தைகள், தாய்மார்கள், வயது முதிர்ந்தவர்கள் என நூற்றுக்கணக்கான பயணிகள் திமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகளால் தவித்துள்ளனர். சாலை மறியல் போராட்டம் செய்தும், பேருந்துகளைச் சிறைபிடித்தும் பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

பேருந்து நிலையம் முழுமையான செயல்பாட்டுக்கு வந்துவிட்டது என்று கூறிக் கொள்ளும் திமுக அரசு, வார இறுதியில் கூட போதுமான பேருந்துகளை ஏற்பாடு செய்யாமல் இருந்திருப்பது வெட்கக் கேடு. நள்ளிரவில் பயணிகளை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய அவல நிலைக்குத் தள்ளியிருக்கும் திமுக அரசு முழுவதுமாகச் செயலற்றுப் போயிருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது. 

திமுக அரசு, உடனடியாக இந்த திராவிட மாடல், விடியல் என்ற நாடகங்களை நிறுத்திவிட்டு, தங்கள் நிர்வாகத் தோல்வியை ஒப்புக்கொண்டு, அதைச் சரி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுவதுமாகத் தயாராகும் வரை, பேருந்துகளை மீண்டும் கோயம்பேட்டில் இருந்து செயல்பட அனுமதிக்க வேண்டும். அதை விடுத்து, பூசி மொழுகும் வேலையில், பொதுமக்களைத் தொடர்ந்து அவதிக்குள்ளாக்கினால், நேற்றைய பொதுமக்களின் போராட்டம், சென்னை முழுக்க மிகப் பெருமளவில் வெடிக்கும் என்று எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்” தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow