விஜயின் கரூர் பயணத்திற்கு மீண்டும் Green Signal... NTK மனுவையும் நிராகரித்த நீதிமன்றம்!
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு எடுத்துள்ள முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாதக நிர்வாகி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது.
தவெக கட்சி தொடங்கியதில் இருந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் அதில் முக்கியமானது கரூர் சம்பவம். கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி தேர்தல் பிரசாரத்திற்காக தவெக தலைவர் விஜய் கரூர் மாவட்டம் வேலுசாமிப்புரத்திற்கு சென்றிருந்தார். அதிகளவு மக்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவத்திற்கு முதலில் தவெக தலைவர் விஜய் கரூருக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்லவில்லை என்றும் சம்பவம் நடைபெற்றவுடன் அங்கிருந்து அவசர அவசரமாக சென்னை சென்றார் என்றும் அரசியல் வட்டாரத்தில் விமர்சனங்களை கிளப்பின.
அதனைத் தொடர்ந்து கடந்த 2025 அக்டோபர் மாதம் விஜய் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மாமல்லபுரம் அழைத்து சந்தித்தார். உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ 20 லட்சம் நிதி வழங்கியிருந்தார். அப்போது, விரைவில் கரூருக்கு நேரில் வந்து சந்திப்பேன் என்றும் அவர் உறுதியளித்திருந்ததாக கூறப்பட்ட நிலையில்,
தேர்தலின் வெற்றி பிறகு முதலமைச்சர் விஜய் வருகிற ஜுலை 10 மற்றும் 11 ஆகிய இரு நாட்கள் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்பிற்கான அரசு ஆணைகளை வழங்குவதற்கு விஜய் நேரில் செல்வதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில் முதலமைச்சர் விஜய் கரூருக்கு செல்வதால் நெரிசல் சம்பவம் தொடா்பான விசாரணையைப் பாதிக்கும் வகையிலோ, நிலுவையில் உள்ள விசாரணை குறித்தோ தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் உள்பட எவரும் பொதுவெளியில் கருத்துகளைத் தெரிவிக்க கூடாது என்று உத்தரவிடக்கோரியும், முதலமைச்சர் விஜய், கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திப்பதை எதிர்த்தும் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மூலம் மனு தாக்கல் செய்யப்பட்டது. .
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் முதல்வரின் பேச்சை உச்ச நீதிமன்றம் கட்டுப்படுத்த வேண்டும் என விரும்புகிறீர்களா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் முதல்வர் விஜய் குற்றஞ்சாட்டப்பட்டவர் என்று திமுக வழக்குரைஞர் கூறியதற்கு உச்ச நீதிமன்றம் கண்டனத்தை தெரிவித்ததோடு, கரூர் பலி வழக்கில், முதல்வர் விஜய் பெயர் குற்றஞ்சாட்டப்பட்டவராக எங்கும் சேர்க்கப்படவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.
முதல்வரின் பயணத்தை நீதிமன்றம் எவ்வாறு முறைப்படுத்த முடியும்? நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சந்திப்பது எவ்வாறு சாட்சிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதாக அமையும்? என்றும் திமுகவிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதன் பின் விசாரணையின் முடிவில் விஜய் கரூருக்கு செல்லவதற்கு எந்த தடையும் இல்லை என்றும் திமுக சார்பில் தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது.
இதனைத் தொடர்ந்து விஜயின் கரூருக்கு பயணத்திற்கு திமுகவை தொடர்ந்து தற்போது நாம் தமிழர் கட்சியும் மனுதாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவை வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் அந்த கோரிக்கையை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ஏற்க மறுத்துள்ளது.
What's Your Reaction?