ரீல்ஸ் இல்லை ரியல்... உங்களுக்குத்தான் சால்வை... உணர்ச்சிவசப்பட்ட முதல்வர் விஜய்!
மக்களின் பிரச்னைகளை, குறைகளை அமைச்சர்களிடமும் அதிகாரிகளிடமும் மட்டும் கேட்டுத் தெரிந்துகொள்ளாமல், தானே நேரில் கேட்டுத் தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வமாய் இருக்கிறார், முதல்வர் விஜய். அந்த வகையில் சமீபத்தில் பல்வேறு மாற்றுத்திறனாளிகள் அமைப்பினரையும் சந்தித்தார் முதல்வர். இந்தச் சந்திப்பில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழ்நாடு மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் சுமிதா சதாசிவத்திடம் பேசினோம்...
“முதல்வர் அறைக்குள் நாங்க நுழையும்போது அவர் எழுந்து நின்று, எங்களை ‘வாங்க... வாங்க...’ என வரவேற்றார். சென்னை ஐ.ஐ.டி_யின் அணுகல்தன்மை ஆய்வு மையத்தின் முதன்மை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் பார்வைக் குறைபாடு உள்ளவர். இதைக் கவனித்த முதல்வர், முன்னே வந்து அவரது கையைப் பிடித்தும் சேரில் உட்கார வைத்தார். நாங்க உட்கார இந்த சேர் போதுமா, வேறு ஏற்பாடு செய்யணுமான்னு கேட்டார். இந்த வரவேற்புக்குப் பிறகு, ‘சொல்லுங்க’ என்று முதல்வர் சொன்னவுடன், நாங்கள் கொண்டு சென்றிருந்த கோரிக்கை மனுவைக் கொடுத்தோம்.
அதை வாங்கி அவர் படிக்க ஆரம்பிக் கும்போது, ஒவ்வொரு கோரிக்கையாக விளக்கம் சொன்னோம். அவற்றைத் தன் கைப்படக் குறித்துக் கொண்டார் முதல்வர். மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கிய கல்வித் திட்டம், தண்டுவட பாதிப்புக்குள்ளானவர்களின் தேவை, சக்கர நாற்காலி தேவை, உதவித்தொகை உயர்வு என ஒவ்வொரு நிர்வாகியும் சொன்ன கோரிக்கைகளை பொறுமையாகக் கேட்டுக்கொண்டார். முதல்வரைச் சந்தித்த பின், எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” என்று சொல்லி முடித்தார்.
இந்தச் சந்திப்பில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள் சங்கக் கூட்டமைப்புத் தலைவரான சிம்ம சந்திரன், சந்திப்பை வீடியோ எடுத்துப் பதிவிட, ‘முதல்வர் சந்திப்பை இப்படி வெளியிடலாமா’ என சமூக வலைதளங்களில் வைரலானது. என்ன நடந்தது என சிம்மசந்திரனிடம் கேட்டோம்.
“கலைஞர், ஜெயலலிதா அம்மா, இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., ஸ்டாலின்னு பல முதல்வர்களைச் சந்தித்துக் கோரிக்கை மனுக்களைக் கொடுத்துப் பேசியிருக்கோம். வழக்கமாக நாங்கள் முதல்வரைச் சந்திக்கும்போது அதிகாரிகள், அமைச்சர்கள் சைடில் அமர்ந்து இருப்பார்கள். ஆனால், முதல்வர் விஜய் சந்திப்பில் அதிகாரிகள், அமைச்சர் என யாரும் இல்லை. அதனால் எந்தச் சம்பிரதாயத் தடையும் இல்லாமல், அரை மணி நேரம் முழுமையாக எங்கள் கோரிக்கையை சொல்ல முடிஞ்சுது.
நான் அவருக்குச் சால்வை போடப்போனேன். அதை வாங்கிட்டு, ‘நீங்கள் எவ்வளவு சேவை செஞ்சிருக்கீங்க. உங்களுக்குத் தான் நான் சால்வை போடணும்’ என்று சால்வையை எனக்குப் போட்டார். அப்போது நான் கீழே விழுந்திடக்கூடாதுன்னு இறுகப் பிடிச்சுக்கிட்டார். நான் ரொம்ப நெகிழ்ந்து போயிட்டேன். அவர் ஒரு முதல்வர் மாதிரி நடந்துக்கலை. ஒரு ஃபிரெண்டைப் போல நடந்துக்கிட்டார்.
என் பசங்க இரண்டு பேரும் முதல்வர் விஜய்யின் தீவிர ரசிகர்கள். அவரைச் சந்திக்க நான் போறேன்னு சொன்னதும், அவங்களும் வருவேன்னு பிடிவா தம் பிடிச்சாங்க. உங்களை உள்ளே விடமாட்டாங்கன்னு சொன்னப்ப, முதல்வர் விஜய்யோடு ஒரு போட்டோ எடுத்திட்டு வான்னு சொன்னாங்க. அவங்க ஆசைப்பட்டாங்களேன்னு அந்த வீடியோவை எடுத்தேன். நான் வீடியோ எடுத்தது முதல்வர் உட்பட யாருக்குமே தெரியலை. அதை எங்க சங்க குரூப்பில் போட்டதால, வேகமாக பரவிடுச்சு. ஆர்வக்கோளாறால் நான் செய்த தவற்றை ஒப்புக்கறேன்’’ என்றார் சிம்மசந்திரன்.
மாற்றங்கள் மாற்றுத்திறனாளிகள் நலனில் இருந்து தொடங்கட்டும்.
- எஸ்.கோவிந்தராஜ்
What's Your Reaction?