கணவனை கொலை செய்து மனைவி நடத்திய நாடகம்...போலீஸ் செய்த சம்பவம்

தென்காசி மாவட்டம் புளியரை அருகே கணவரை கொலை செய்து உடலை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டார்.

Oct 6, 2024 - 21:07
கணவனை கொலை செய்து மனைவி நடத்திய நாடகம்...போலீஸ் செய்த சம்பவம்

தென்காசி மாவட்டம், புளியரை அருகே உள்ள மேலப்புதூர் பகுதியை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 42). இவரது மனைவி மாயா (வயது 33). இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், சின்னத்துரை வெளியூரில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில், அவ்வப்போது சின்னத்துரை வீட்டிற்கு வந்து செல்வார் என கூறப்படும் நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்த சின்னத்துரை நேற்றைய தினம் தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்ததாக கூறி அவரது மனைவி ஆட்டோவில் சின்னத்துரையின் உடலைப் புளியரை காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தார்.

இந்த நிலையில், அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, முதற்கட்ட விசாரணையை சின்னத்துறையின் மனைவியான மாயாவிடம் தொடங்கினர்.

 இந்த விசாரணையின் போது, சின்னத்துரை ரத்த காயங்களுடன் வீட்டு வாசல் முன்பு கிடந்ததாகவும், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்த போது அவர் உயிரிழந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் கூறவே, அச்சத்தில் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்ததாகவும் சின்னதுரையின் மனைவி மாயா போலீசாரிடம் கூறியுள்ளார்.

ஆனால், அவர் அளித்த பதிலானது முன்னுக்கு பின் முரணாக இருக்கவே, சந்தேகம் அடைந்த போலீசார் மாயாவை துருவி, துருவி விசாரித்த போது மாயாவும் அவரது அண்ணனான மனு என்பவரும் சேர்ந்து சின்னத்துரையை அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

மேலும், உயிரிழந்த சின்னத்துரையின் உடலை ஆட்டோவில் ஏற்றி தென்காசி அருகே உள்ள அவரது உறவினர் ஒருவர் வீட்டிற்கு எடுத்துச் சென்று புதைத்து விடலாம் எனக்கூறி, அவரது உறவினர் வீட்டிற்கு சென்ற நிலையில், சின்னத்துரையின் உடலை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர் உடனடியாக காவல் நிலையத்திற்கு கொண்டு செல்ல அறிவுருத்தியுள்ளார்.

 உடனடியாக, புளியரை காவல் நிலையத்திற்கு சின்னதுரையின் உடலை எடுத்து வந்ததாக மாயா தெரிவித்த நிலையில், அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் சின்னதுரையை கொலை செய்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.

கணவரை கொலை செய்துவிட்டு ஆட்டோவில் அவரது உடலை காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து அவரது இறப்பிற்கான காரணம் என்ன என தெரியவில்லை எனவும், விசாரணை நடத்த வேண்டும் எனவும் போலீசாரிடம் நாடகமாடிய மனைவி மற்றும் மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் புளியரைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow