செல்போனில் சைரன் சத்தம் வந்தால் பயப்பட வேண்டாம் : பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்

இன்று செல்போன்களில் வரும் உரத்த ஒலியுடனான சைரன் சப்தம் வந்தால் பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. 

செல்போனில் சைரன் சத்தம் வந்தால் பயப்பட வேண்டாம் : பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்
செல்போனில் சைரன் சத்தம்

மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை, தேசிய மற்றும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் இணைந்து இந்தச் சோதனையை நடத்துகின்றன. பேரிடர் காலங்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஒரே நேரத்தில் எச்சரிக்கை தகவல்களைக் கொண்டு சேர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

'செல் பிராட்காஸ்டிங்' எனப்படும் இந்தத் தொழில்நுட்பம், செல்போன் கோபுரங்களின் (Tower) எல்லைக்குள் இருக்கும் அனைத்து செல்போன்களுக்கும் ஒரே நேரத்தில் தகவலை அனுப்பும். உங்கள் செல்போன் 'சைலண்ட்' (Silent) பயன்முறையில் இருந்தாலும், இந்த எச்சரிக்கை வரும்போது உரத்த சத்தத்துடன் கூடிய அபாய ஒலியை எழுப்பும்.

செல்போன் திரையில் எச்சரிக்கை செய்தி தோன்றும். இது ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவர்களைக் கூட விழிப்புணர்வு பெறச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று வரும் குறுஞ்செய்தியில், இது ஒரு 'மாதிரி சோதனை' (Sample Testing) என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.இந்த எச்சரிக்கை செய்தி வரும்போது பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. அந்தச் செய்தியின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டிய அவசியமில்லை. அதில் உள்ள 'புறக்கணிக்கவும்' (Ignore) அல்லது 'சரி' (OK) என்ற பட்டனை அழுத்தினால் போதுமானது.

மத்திய தொலைத்தொடர்பு மேம்பாட்டு மையம் உருவாக்கியுள்ள 'சசேத்' என்ற ஒருங்கிணைந்த எச்சரிக்கை தகவல் அமைப்பு மூலம் இந்தச் செய்திகள் அனுப்பப்படுகின்றன. அவசரக்காலங்களில் தொழில்நுட்பக் கோளாறுகள் இன்றி தகவல்கள் சென்றடைவதை உறுதி செய்யவே இந்த ஒத்திகை நடத்தப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow