சவ ஊர்வலங்கள் நடத்துவது தொடர்பாக தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

இறுதி மரியாதை ஊர்வலத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது

Dec 13, 2023 - 12:47
Dec 13, 2023 - 19:48
சவ ஊர்வலங்கள் நடத்துவது தொடர்பாக தமிழக அரசுக்கு  ஐகோர்ட் கேள்வி

சவ ஊர்வலங்களை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு இல்லாமல் நடத்த விதிகளை வகுப்பது தொடர்பாக தமிழக அரசு மற்றும் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பண்ருட்டி அருகே சவ ஊர்வலத்தை எடுத்து சென்ற போது சாலையில் வீசப்பட்ட பூ மாலையில் சிக்கிய வாகன ஓட்டி ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறை உரிய விதிகளை வகுக்காததே இதுபோன்ற சம்பவத்திற்கு காரணம், அதனால், உரிய வழிகாட்டு விதிகளை வகுக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி பண்ருட்டியை சேர்ந்த அன்புச்செல்வன் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்க பூர்வாலாவுக்கு கடிதம் எழுதினார். 

அன்புச்செல்வனின் கடிதத்தின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபூர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு, சவ ஊர்வலங்களை எடுத்துச் செல்ல அரசியலமைப்பு அனைவருக்கும் சம உரிமை வழங்கியுள்ளது. 

ஆனால், இறுதி மரியாதை ஊர்வலத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது. அதனால், சவ ஊர்வலங்களை இனி சாலையில் எடுத்து செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு விதிமுறைகளை வகுப்பது குறித்து அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 09ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow