"அவன் இல்லாத வாழ்க்கை வேண்டாம்"... கடிதம் எழுதிவிட்டு மனைவி தற்கொலை! ஆணவக்கொலையில் சிக்கும் குடும்பம்

தனது மரணத்திற்கு துரை, சரளா, நரேஷ், தினேஷ் ஆகிய நான்கு பேர் மட்டுமே காரணம் என்று ஷர்மிளா தற்கொலைக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Apr 23, 2024 - 15:10
"அவன் இல்லாத வாழ்க்கை வேண்டாம்"... கடிதம் எழுதிவிட்டு மனைவி தற்கொலை! ஆணவக்கொலையில் சிக்கும் குடும்பம்

”அவன் இல்லாத Life எனக்கும் வேண்டாம்.... இந்த நாலு பேருதான் என் உயிர எங்கிட்ட இருந்து பறிச்சு என்ன வாழ விடாம பண்ணிட்டாங்க... என்னால அவன் இல்லாம இருக்க முடியல...” இப்படி உருக்கமாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்த பெண் வேறு யாருமில்லை, அண்மையில் தலைநகரையே உலுக்கும் விதமாக பள்ளிக்கரணையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட பிரவீன் என்பவரின் மனைவி ஷர்மிளாதான். தற்கொலைக்கு முயன்ற அந்தப் பெண், சிகிச்சை பலனின்றி இறந்தேவிட்டார். அவர் எழுதிய கடிதம் சிக்கியதால், இந்தச் சம்பவம் இப்போது மீண்டும் பரபரப்பாகியுள்ளது. 

சென்னை பள்ளிக்கரணையில், கடந்த பிப்ரவரி 24-ம் தேதி இரவு 8 மணி அளவில், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பிரவீன் என்பவர், மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ரத்த வெள்ளத்தில் மிதந்தபடி அவர் உயிரிழந்து கிடந்தது, அந்தப் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் விசாரித்ததில், அவர் ஆறு மாதங்களுக்கு முன் ஷர்மிளா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டதும், அவர் பட்டியலினத்தவர் என்பதால் அது பிடிக்காத ஷர்மிளாவின் உறவினர்கள் பிரவீனை ஆணவப் படுகொலை செய்ததும் தெரிய வந்தது. 

இதன் அடிப்படையில், ஷர்மிளாவின் அண்ணன் தினேஷ் என்ற குட்டி அப்பு என்பவர் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். ஆனால், அவர்களிடம் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஷர்மிளா, கடந்த 14-ம் தேதி, அம்பேத்கர் நகரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார். அப்போது அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்கொலைக்கு முயன்றபோது, கழுத்துப் பகுதியில் இருந்த நரம்புகள் பாதிக்கப்பட்டதால், ஷர்மிளா கோமா நிலைக்குச் சென்றுள்ளார். இதையடுத்து அவரை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதற்கிடையே, கொலை செய்தவர்களுக்கு ஆதரவாக பள்ளிக்கரணை காவல்துறையினர் செயல்பட்டு வருவதாக, ஷர்மிளா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்த நிலையில், கோமாவில் இருந்த அவர் தற்போது உயிரிழந்திருப்பது, இந்த விவகாரத்தை இன்னும் பரபரப்பாக்கியுள்ளது. மேலும், ஷர்மிளா எழுதியதாகக் கூறப்படும் தற்கொலைக் கடிதம் ஒன்றும் வெளியாகியிருக்கிறது. அதில், தனது மரணத்திற்கு துரை, சரளா, நரேஷ், தினேஷ் ஆகிய நான்கு பேர் மட்டுமே காரணம் என்று ஷர்மிளா குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, ஷர்மிளாவின் பெற்றோரான துரை, சரளா மற்றும் அவரது அண்ணன்களான நரேஷ், தினேஷ் ஆகியோரிடம் போலீசார் மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த விவகாரத்தால், ஆணவக் கொலை வழக்கில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow