குடியிருப்புகளை வழங்க இருளர்கள் கோரிக்கை

தயார் நிலையில் உள்ள குடியிருப்புகள் விரைவில் இருளர் இன மக்களிடம் ஒப்படைக்கப்படும் என உறுதி

Dec 7, 2023 - 15:17
Dec 7, 2023 - 15:22
குடியிருப்புகளை வழங்க இருளர்கள் கோரிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருளர் பழங்குடியினர்களுக்கென கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் பணிகள் 95சதவிகிதம் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் அக்குடியிருப்புகளை தங்களிடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் என இருளர் பழங்குடியின மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் இருளர் இன பழங்குடி மக்களுக்கு நவீன குடியிருப்பு வீடுகள் கட்டி பயனாளிகளுக்கு வழங்கும் பணியை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர் நிலைகளின் ஓரம் குடிசைகள் கட்டி வசிக்கும் ஏழ்மை நிலையில் உள்ள இருளர் இன பழங்குடி மக்கள்  தேர்வு செய்யப்பட்டு,அவர்களுக்கு வீட்டு மனையுடன் வீடுகள் கட்டி வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் ஒன்றியம்,ஊத்துக்காடு ஊராட்சியில் இருளர் பழங்குடியினர்களுக்கு 76 குடியிருப்புகளும்,சிங்காடி வாக்கத்தில் 100 குடியிருப்புகளும்,அதேபோல காஞ்சிபுரம் ஒன்றியம், குண்டுகுளம் ஊராட்சியில் 58 குடியிருப்புகளும், உத்திரமேரூர் ஒன்றியம் மலையங்குளம் ஊராட்சியில் 178,குடியிருப்புகளும், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் காட்ரம்பாக்கத்தில் 31 குடியிருப்புகளும் என காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 443 குடியிருப்புகள் ரூ.19 கோடியே 37 இலட்சத்து 81 ஆயிரம் மதிப்பீட்டில்  கட்டப்பட்டுள்ளது.தற்போது சாலை வசதி, குடிநீர் வசதி, மின் வசதி என அனைத்து அடிப்படை வசதிகளுடன் இக்குடியிருப்பு பணிகள் 95 சதவிகிதம் நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில் தற்போது மிக்ஜாம் புயல் காரணமாக இருளர் இன மக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட நிலையில்,தற்போது அனைவரும் வீடு திரும்பியுள்ள நிலையில்,தங்களுக்கென ஒதுக்கப்பட்டு கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை மாவட்ட நிர்வாகம் விரைவில் தங்களிடம் ஒப்படைக்க முன் வர வேண்டும் என இருளர் இன மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

குறிப்பாக இக்குடியிருப்புகளை வடகிழக்கு பருவமழை காலம் துவங்குவதற்கு முன்பாகவே தங்களிடம் ஒப்படைத்திருந்தால் நிவாரண முகாம்களில் நாங்கள் தங்க வேண்டிய நிலையே ஏற்பட்டு இருக்காதும் என இருளர் இன மக்கள் கருதுகின்றனர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, மாவட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள குடியிருப்புகள் விரைவில் இருளர் இன மக்களிடம் ஒப்படைக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow