வான் சாகச நிகழ்ச்சியில் உயிரிழப்பு..”நிர்வாகச் சீர்கேடு..” கண்டனம் தெரிவித்துள்ள இபிஎஸ்

சென்னை மெரினாவில் நடைபெற்ற விமானப்படையினரின் வான் சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

Oct 6, 2024 - 22:01
வான் சாகச நிகழ்ச்சியில் உயிரிழப்பு..”நிர்வாகச் சீர்கேடு..” கண்டனம் தெரிவித்துள்ள இபிஎஸ்

சென்னை மெரினாவில் நடைபெற்ற விமானப்படையினரின் வான் சாகச நிகழ்ச்சியை, 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர். இதன்மூலம், இந்தியாவில் அதிகப்படியான பார்வையாளர்கள் கண்டு ரசித்த நிகழ்ச்சி என்ற புதிய சாதனையை சாகச நிகழ்ச்சி படைத்துள்ளது. விமானப் படையினரின் இந்த சாகச நிகழ்ச்சி முடிந்ததும், மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் வீடு திரும்ப முற்பட்டதால் மெரினாவை ஒட்டியுள்ள சாலைகளில் நடந்து செல்ல முடியாத அளவிற்கு மக்கள் கூட்டம் அலை மோதியது. 

இந்த கூட்ட நெரிசலில் 200-க்கும் மேற்பட்டோர் மயக்கம், உடற்சோர்வு அடைந்த நிலையில், பலர் முதலுதவி சிகிச்சைக்கு பின் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் மயக்கமடைந்தும், நீர்ச்சத்து குறைபாடு காரணமாகவும் கவலைக்கிடமான நிலையில், 93-க்கும் மேற்பட்டோர் ராஜீவ் காந்தி மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை என சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அதில் கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஜான், திருவொற்றியூரை சேர்ந்த கார்த்திகேயன்,  குரோம்பேட்டையை சேர்ந்த சீனிவாசன், ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தினேஷ்குமார் என்பவர் உள்பட 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும், கூட்ட நெரிசலில் சிக்கிய பலருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், இந்த உயிரிழப்புகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அவர் பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”இந்திய பாதுகாப்புத் துறையின் முக்கிய அங்கங்களுள் ஒன்றான இந்திய விமானப் படையின் 92வது துவக்க நாள் விழாவை முன்னிட்டு, விமானப் படையின் தீரத்தை பறைசாற்றும் வண்ணம் சென்னையில் இன்று வான் சாகச நிகழ்ச்சி அரங்கேறியது.

இதற்கான அறிவிப்பு முன்கூட்டியே வெளியான நிலையில், லட்சக்கணக்கான மக்கள் பார்வையிடக் கூடுவர் என்பது அறிந்து, போக்குவரத்து, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இருப்பினும், இன்றைய நிகழ்ச்சியில் நிர்வாக ரீதியிலான ஏற்பாடுகளும், கூட்டத்தையும்- போக்குவரத்தையும் ஒழுங்கு படுத்துவதற்கு காவல்துறையினரும் போதிய அளவில் இல்லாததால், மக்கள் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி, குடிநீர் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டு, மேலும் வெயிலின் தாக்கத்தால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியும் , மிகுந்த வேதனையும் அளிக்கின்றன. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலும் வருத்தங்களும்.

 இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வைக் கூட முறையாக ஒருங்கிணைக்கத் தவறிய நிர்வாகச் சீர்கேடே உருவான திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள். இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ராணுவ விமானப் படையின் தீரத்தை பறைசாற்றும் நிகழ்வுகள் இதுவரையில் சிறப்பாக நடைபெற்று வந்துள்ளன,ஆனால் இன்று தமிழகத்தில் நிகழ்பெற்ற நிகழ்வில் உயிர்சேதம் ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது. இந்நிகழ்வுக்கு முறையான பாதுகாப்பு கொடுக்க தவறிய இந்த அரசுக்கு அரசுக்கு என் கடும் கண்டனங்கள்.” என தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow