மீண்டும் மின்துறையில் செந்தில் பாலாஜி?

மின்சாரத்துறையை செந்தில்பாலாஜிக்கு மீண்டும் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சராக செப்.30 ஆம் தேதி பதவியேற்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Sep 26, 2024 - 18:36
மீண்டும் மின்துறையில் செந்தில் பாலாஜி?

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி (Senthi Balaji) போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு, வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக கணேஷ் குமார் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் 47 பேர் மீது நான்கு வழக்குகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், அமலாக்கத்துறையால் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்குகளின் அடிப்படையில் அவர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் (Money Laundering Case) ஈடுபட்டதாகக் கூறி அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனர். கடந்த ஓராண்டுக்கு மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில்பாலாஜி ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பின்னர் சென்னை உயர்நீதிமன்றமும் தொடர்ச்சியாக தள்ளுபடி செய்திருந்தது.

பலமுறை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு மீதான வாதங்கள் நிறைவடைந்த நிலையில் கடந்த மாதம் தீர்ப்புக்காக இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின், ஜார்ஜ் மாசிஹ் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது. 

செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், சென்னை அறிவாலயம், புழல் சிறை மற்றும் கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திமுக தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இந்த வழக்கு விசாரணைக்கு இடையே செந்தில்பாலாஜியிடம் இருந்த மின்சாரத்துறை அமைச்சர் பதவி, 2023ம் ஆண்டு ஜூன் 16ம்  தேதி  தங்கம் தென்னரசிடம் வழங்கப்பட்டது. 

இந்நிலையில், தற்போது ஜாமினில் வெளியான செந்தில்பாலாஜி அமைச்சராக பதவி வகிப்பதில் எந்த சிக்கலும் இல்லை எனபதால், அவர் மீண்டும் மின்சாரத்துறையை செந்தில்பாலாஜிக்கு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சராக செப்.30 ஆம் தேதி பதவியேற்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow