புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் ஆலய ரத யாத்திரை.. ஏன் கொண்டாடுறாங்க தெரியுமா?
ஒடிசா மாநிலத்தின் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் ஆலய ரத யாத்ரா விழா கோலகலமாக கடந்த 27 ஆம் தேதி துவங்கியுள்ள நிலையில், இது எதற்காக கொண்டாடப்படுகிறது? இந்த நிகழ்வின் கவனிக்கத்தக்க முக்கிய விஷயங்கள்? என்ன என்பதை இப்பகுதியில் காணலாம்.

புருஷர்களில் உத்தமர் ஜெகந்நாதர் குடி கொண்டுள்ள இடம் புருஷ உத்தமர் புரி. அதாவது, புருஷோத்தம புரி. புரி என்றதுமே நினைவுக்கு வருவது அங்கே நடக்கும் ரதயாத்திரை. உண்மையில் ஜெகந்நாதர் யாத்திரை அறுபத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் அதே நாளில் கொண்டாடப்படுகிறது.
ரத யாத்திரை ஏன் ?
துவாபர யுகத்தில் கிருஷ்ணர் பிரஜ் பூமியை விட்டு துவாரகா சென்று விட்டார். பிரஜ் பூமி என்பது மதுரா, பிருந்தாவன் இடையே யமுனா நதியின் இருபுறங்களிலும் இருக்கும் பகுதி. கிருஷ்ணரின் அந்தப் பிரிவு ராதைக்கும் மற்ற கோபிகை களுக்கும் மிகுந்த வலியைத் தந்தது. நூறு வருடங்கள் கடந்தும் அவ்வலியுடன் ஆனால் கிருஷ்ணரிடம் மாறாத அன்புடன் வாழ்ந்து வந்தனர். ஒருமுறை சூரிய கிரகணத்தின்போது குருக்க்ஷேத்திராவில் உள்ள பிரம்மகுண்ட் என்னும் குளத்தில் ஸ்நானம் செய்ய பிரஜ்வாசிகள் கோபிகைகளுடன் சென்றனர்.
அப்போது கிருஷ்ணரும் தன் இராணிகளுடன் அங்கே வந்திருந்தார். கிருஷ்ணரைக் கண்டதும் பிரஜ்வாசிகளும் கோபிகைகளும் ஆனந்தம் அடைந்தனர். ஆனாலும் துவாரகையின் அரசன் என்ற சின்ன இடைவெளி வந்துவிட்டதாக அவர்கள் கருதினர். அந்த எண்ணம் நீங்கி இடையனான கிருஷ்ணரின் உண்மையான அன்பைக் காண பிரஜ்தேச வாசிகள் கோபிகைகளுடன் கிருஷ்ணர், பலராமர், சுபத்ராவுடன் கிருஷ்ணரின் கதர்ஷ்ண சக்கரம் சகிதம் ரதத்தில் மீண்டும் ஒருமுறை மதுரா சென்றனர். இதன் அடையாளமாகவே ரத யாத்திரை நடத்தப்படுகிறது என்பது ஒரு சாராரின் கருத்து.
குண்டிச்சா ஆலயம்:
கிருஷ்ணர், பலராமர், சுபத்ரா ஆகிய மூவரும் ஒவ்வொரு வருடமும் பிறந்த இடமான மதுராவை தரிசிக்கச் செல்கின்றனர் என்பது மற்ற சிலரின் கருத்து.
புரியில் குண்டிச்சா தேவிக்கும் ஆலயம் உள்ளது. குண்டிச்சா, அரசன் இந்திரத்யும்னனின் மனைவி, கிருஷ்ணருக்கு தாய் வழி உறவு முறை எனவே குண்டிச்சா ஆலயம் மதுராவாகக் கருதப்படுகிறது. இதனால் ரத யாத்திரை புரி ஆலயத்திலிருந்து புரி க்ஷேத்திரத்தில் உள்ள மற்றொரு ஆலயமான குண்டிச்சா ஆலயம் வரை நடத்தப்படுகிறது. புரியில் உள்ளவர்கள் ரத யாத்திரையை குண்டிச்சா யாத்திரை என்றும் குறிப்பிடுகின்றனர்.
ஜெகந்நாதர் மேலுலகத்திலிருந்து பூமிக்கு வந்து பக்தர்களுக்குக் காட்சி தருகிறார் என்பதும் ஒரு நம்பிக்கை. தேருக்கு வடமிழுக்கும்போது உயர்வு தாழ்வும் மற்ற பேதங்களும் காணப்படுவதில்லை. புரியின் அரசரே தங்கக் கைப்பிடி கொண்ட துடைப்பத்தால் ரதங்கள் புறப்படும் முன்னர் சாலையை சுத்தம் செய்கிறார்.
ரத யாத்திரை எப்படிக் கொண்டாடப்படுகிறது?
ரத யாத்திரை நிகழ்ச்சிகள் ஒரு மாதத்திற்கும் மேலானவை. அக்ஷய திரிதியை அன்று ரதங்கள் தயாரிக்கும் வேலை முடுக்கி விடப்படுகிறது. புதிதாக ரதங்கள் மட்டுமே வேப்ப மரங்களால் தயாராகின்றன. சாரதி, குதிரைகள், கலசம், மற்றும் ரதத்திலுள்ள பல தேவதைகள் ஆகிய உருவங்கள் நபகலேபரா என்று மூர்த்தங்களை மாற்றும் வருடங்களில் (12 வருடங்களுக்கு ஒருமுறை) புதிதாகச் செய்யப் படுகின்றன.
ஜெகந்நாதரின் ரதம் நந்திகோஷா என அழைக்கப்படுகிறது. 13.5 மீட்டர் உயரமும் 16 சக்கரங்களும் உடையது. சாரதியின் பெயர் தாருகன். அதனுடன் பூட்டப்பட்டுள்ள
நான்கு குதிரைகள் முறையே சங்கா, பாலகா, ஸ்வேதா, ஹரிதஸ்வா என அழைக்கப்படுகின்றன. பலராமரது ரதம் தலத்வஜா. 13.2 மீட்டர் உயரமும் 14 சக்கரங்களும் உடையது. மாதலி அதன் சாரதி! கருமை நிறமுள்ள நான்கு குதிரைகள் அந்த ரதத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
சுபத்ராவின் ரதம் தர்பதாலன் அல்லது பத்ம த்வஜா. 129 மீட்டர் உயரமும் 12 சக்கரங்களும் கொண்டது. அதன் சாரதி அர்ஜுனன் சிவப்பு நிறமுள்ள நான்கு குதிரைகள் இந்தத் தேரை இழுப்பதுபோல் சேர்க்கப்பட்டுள்ளன.
ரத யாத்திரையின் முக்கிய நாட்கள்:
இந்த வருடம் ரத யாத்திரை நிகழ்வு ஜூன் 27ம் தேதி தொடங்கியது. அதற்கு முதல் நாளே குண்டிச்சா ஆலயம் சுத்தம் செய்யப்பட்டு ஜகந்நாதரை வரவேற்கத் தயார் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ரத யாத்திரையின் ஐந்தாம் நாள் ஹேரா பஞ்சமி (ஜூலை 1, 2025) அன்று குண்டிச்சா ஆலயத்தில் ஜகந்நாதர் லட்சுமி தேவி சந்திப்பு நிகழ்வதாக நம்பப்படுகிறது. ரத யாத்திரையின் ஏழாம் நாள் (ஜூலை 3, 2025) சந்தியா தர்ஷன் என மாலை ஜகந்நாதரை தரிசிக்கும் சிறப்பு வைபவம் நடைபெறுகிறது. அன்று மாலை ஜகந்நாதரை தரிசனம் செய்வது, புரி ஆலயத்தில் ஜகந்நாதரை பத்து வருடங்கள் தொடர்ந்து தரிசிப்பதற்குச் சமம் என்பது நம்பிக்கை!
பத்தாம் நாள் (ஜூலை 5, 2025) ரதங்கள் மூர்த்தங்களுடன் மீண்டும் புரி ஆலயத்திற்குக் திரும்புகின்றன. இது பஹூதா யாத்திரை (திரும்பி வருதல்) என அழைக்கப்படுகிறது. அடுத்த நாள் மூர்த்தங்கள் சுனா பேஷா (சுனா வேஷா) என தங்க ஆபரண அலங்காரங்களுடன் பக்தர்களுக்குத் தரிசனம் தருகின்றன.
சாஸ்திரங்கள் ’ரதஸ்தம் வாமனம் த்ருஷ்டவா புனர் ஜன்மம் ந வித்யதே’ என்கின்றன. அதாவது, புரியின் ரத யாத்திரையை தரிசித்தவர்களுக்கு மறுபிறவி என்பது இல்லை!
(கட்டுரையாளர்- முனைவர் ஜி.குமார் / குமுதம் பக்தி / 03.07.2025)
What's Your Reaction?






