போனுக்கு இத்தனை அக்கப்போரா? மேனேஜர் முகத்தில் குத்து விட்ட அரசு பஸ் கண்டக்டர்.. குன்றத்தூரில் கொலைவெறி

இருவரும் மூர்க்கமாகத் தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது

Apr 13, 2024 - 12:38
போனுக்கு இத்தனை அக்கப்போரா? மேனேஜர் முகத்தில் குத்து விட்ட அரசு பஸ் கண்டக்டர்.. குன்றத்தூரில் கொலைவெறி

குன்றத்தூர் அருகே அரசு பணிமனையில் மேலாளருக்கும், நடத்துநருக்கும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது

குன்றத்தூரை அடுத்த வழுதலம்பேட்டில் உள்ள அரசு பணிமனையில் உதவி கிளை மேலாளராக இருப்பவர் பரதன். மேலும், அதே பணிமனையில் இருந்து திருப்போரூர் வரை இயக்கப்படும் தடம் எண் 566 பேருந்தின் நடத்துநராக ராஜசேகர் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ராஜசேகர் கடந்த 12-ம் தேதி விடுமுறை எடுத்துள்ளார். இதுகுறித்து பரதன் அலைபேசியில் அழைத்துக் கேள்வி கேட்டதாகக் கூறப்படுகிறது. அதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 
மறுநாள் காலை பணிமனைக்கு வேலைக்கு வந்த ராஜசேகர்,  லீவு நாளில் எனக்கு எதற்கு போன் செய்தீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதில் இருவருக்கும் பேச்சு முற்றிக் கைகலப்பானது. ஆத்திரத்தில் ராஜசேகரன் பரதனைத் தாக்கினார். 

அதற்கு பதிலடியாக பரதனும் தாக்க இருவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. அப்போது பரதன் முகத்தில் ராஜசேகரன் குத்தியதை அடுத்து, அவரை பரதன் மரக்கட்டையால் தாக்கினார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த ராஜசேகரன், பணிமனையில் இருந்த இரும்பு ராடை எடுத்து பரதனைத் தாக்கும் முனைப்புடன் துரத்தினார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் இருவரையும் விலக்கி விட்டு சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில், இருவரும் மூர்க்கமாகத் தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும், இதுகுறித்து குன்றத்தூர் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow