தாசில்தாரை தாக்கிய வழக்கில் மு.க.அழகிரி விடுதலை-கடைசி நிமிடத்தில் ட்விஸ்ட்

மு.க அழகிரி உள்ளிட்ட 17 பேரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்

Feb 16, 2024 - 12:31
Feb 16, 2024 - 12:34
தாசில்தாரை தாக்கிய வழக்கில் மு.க.அழகிரி விடுதலை-கடைசி நிமிடத்தில் ட்விஸ்ட்

மதுரை மாவட்ட மேலூர் தாசில்தார் காளிமுத்துவை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், மு.க.அழகிரி உட்பட 17 பேரையும் விடுதலை செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

2011 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, மேலூரை அடுத்த வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோயிலுக்குள், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து மேலூர் தேர்தல் அதிகாரியும் தாசில்தாருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் தாசில்தார் காளிமுத்துவை தாக்கியதாக கூறி, கீழவளவு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதன்பேரில் மு.க.அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன் மற்றும் திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம் ,செந்தில், பொன்னம்பலம், நீதிதேவன், நாகராஜ், மயில்வாகனன், சேகர், தமிழரசன், போஸ், பாலு, ராகவன், பாலகிருஷ்ணன், அய்யனார், வெள்ளையன் உட்பட 21 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது. 

இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதில் 28 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி முத்துலெட்சுமி, மு.க அழகிரி உள்ளிட்ட 17 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow