நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் இருக்கா? எடுக்கா விட்டால் ஸ்பாட் ஃபைன்.. போக்குவரத்து காவல் ஆய்வாளர் எச்சரிக்கை
சென்னை: நம்பர் ப்ளேட்களில் காவல்துறை ஸ்டிக்கர் ஒட்டிய வாகனத்திற்கு போக்குவரத்து காவலர்கள் 500 ரூபாய் அபாராதம் விதித்தனர். அடுத்த முறை ஸ்டிக்கரை எடுக்காமல் இருந்தால் 1500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என போக்குவரத்து காவல் ஆய்வாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் தங்களின் வாகனங்களின் துறை சார்ந்த பெயர்கள் மற்றும் அதற்கான லோகோவை ஸ்டிக்கர்களாக தங்களின் வாகனங்களில் ஓட்டுகின்றனர். குறிப்பாக பலரும் நம்பர் பிளேட்டுகளில் இந்த ஸ்ட்டிக்கரை ஒட்டுகின்றனர்.
சென்னையில் தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களை அகற்றுவதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இன்று முதல் நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தால் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ள நிலையில் இன்று முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இன்று முதல் தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டில் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும். முதல் முறை விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.500, இரண்டாவது தடவை விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.1,500 அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்னளர்.
இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பாக செல்லக்கூடிய வாகனங்களில் சம்மந்தப்பட்ட துறையை சேர்ந்த ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என போக்குவரத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக இன்று போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டி செல்லும் வாகனங்களை போக்குவரத்து போலீசார் கண்காணித்து அவர்களுக்கு அபராதம் செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேப்பேரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாண்டியவேலு, கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற அறிவிப்பு வெளிவந்தது. ஊடகம், வழக்கறிஞர்கள் காவல்துறை என எந்த ஒரு ஸ்டிக்கரையும் வாகனங்களில் ஒட்டக்கூடாது என்ற அறிவிப்பு வந்தது.
குறிப்பாக வாகனங்களில் இருக்கக்கூடிய நம்பர் பிளேட்டில் எந்த ஒரு ஸ்டிக்கரையும் ஒட்டக்கூடாது. வாகனத்தில் இருக்கக்கூடிய நம்பர் பிளேட் தெளிவாக தெரிய வேண்டும் என தெரிவித்தார். இந்த அறிவிப்பு வந்தவுடன் பல பேர் அதை எடுத்து விட்டனர். தற்பொழுது அரை மணி நேரமாக நிற்கின்றோம் இரண்டு வாகனங்கள் மட்டும்தான் ஸ்டிக்கர் ஒட்டி வந்தது. ஒரு சில நபர்கள் தெரியாமல் உள்ளனர் அவர்களுக்கு எடுத்துரைத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி ஸ்டிக்கரை எடுக்குமாறு கூறியுள்ளோம். முதல் முறையாக 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
வீட்டில் சென்று ஸ்டிக்கரை எடுக்காமல் இருந்தால் மீண்டும் அடுத்த இடத்தில் பிடிப்படும் பொழுது 1500 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும் என தெரிவித்தார். எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக காவல் துறை வாகனத்தில் இருந்து நாங்கள் இந்த நடைமுறையை ஆரம்பித்திருக்கிறோம் என கூறினார்.
இந்த சோதனைக்கு காவல்துறையினர் ஒத்துழைப்பு தருகின்றனர். இந்த நடைமுறையில் அரசு என்ன சொல்கிறதோ அதை அடுத்த கட்டாயமாக செய்ய உள்ளோம். அதை தொடர்ந்து நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என கூறினார். குற்றச்செயலில் ஈடுபடும் நபர்கள் கூட அந்த ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு வாகனத்தில் செல்கின்றனர். காவல்துறையிடம் இருந்து தற்காத்துக் கொள்ள அவர்கள் இப்படி செய்கின்றனர். ஊடகத்தில் பணிபுரியும் பல நபர்கள் இதை வரவேற்கிறார்கள் என கூறினார்.
முதலில் நம்பர் பிளேட்டில் உள்ள ஸ்டிக்கர்களுக்கு மட்டும்தான் தற்போது அபராதம் விதிக்க வேண்டும் என்ற தகவல் வந்திருக்கிறது என்றும், மற்ற இடங்களில் ஒட்டும் ஸ்டிக்கர்களுக்கு தற்போது எந்த ஒரு அபராதமும் விதிக்கப்பட வில்லை என்றும், ஆன்லைன் மூலமாகவும் அபராதம் செலுத்தலாம் என்று தெரிவித்தார்.
What's Your Reaction?






