தலையங்கம்: அரசின் தாரக மந்திரம்!
தவெக அமைச்சரவையில் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பை காங்கிரஸ், விசிக மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகள் மக்கள் சேவைக்காகப் பயன்படுத்த வேண்டும்.
தமிழகத் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக' என்று சொல்லத்தக்க அளவில் ஓட்டுக்குப் பணம் கொடுக்காமல், சாதி ஓட்டு என்ற வளையத்துக்குள் சிக்காமல் பலவிதமான 'முதல்முறை களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார், முதல்வர் ஜோசப் விஜய்!
ராஜாஜி ஆட்சிக்குப் பிறகு மீண்டும் கூட்டணி ஆட்சிக்கு வழி வகுத்ததையும் ஒரு புரட்சியாகவே சொல்லலாம். 'முழுப் பெரும்பான்மை இல்லாதபோது, விஜய்க்கு வேறு வழியில்லையே' என்று சிலர் சொல்லக்கூடும். ஆனால், இதேபோல் பெரும்பான்மை இல்லாமல் கருணாநிதி தலைமையில் அமைந்த தி.மு.க. ஆட்சியில், கூட்டணிக் கட்சிகளுக்கு பங்கு அளிக்கப்படவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் இனி ஆட்சி அதிகாரத்தைப் பெற வாய்ப்பே இல்லை என்று நம்பிக்கை இழந்திருந்த காங்கிரஸ் கட்சிக்கு இது ஒரு 'ஜாக்பாட்'தான்! கிடைத்திருக்கும் அமைச்சர் பதவி அதிகாரத்தை முறையாகப் பயன்படுத்தி, உண்மையான சேவை ஆற்றுவதோடு, கட்சியையும் அவர்கள் எப்படி வளர்த்துக் கொள்கிறார்கள் என்பதைப் பார்க்கவேண்டும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைப் பொறுத்தவரை, திருமாவளவனின் நெடுநாள் கோரிக்கைக்கு இரண்டு திராவிடக் கட்சிகளும் அளிக்காத ஒரு வாய்ப்பை த.வெ.க. அரசு தந்திருக்கிறது. திருமாவளவன் பதவி ஆசையால் விலை போய்விட்டார்; தி.மு.க-வுக்குத் துரோகம் செய்துவிட்டார்" என்று சிலர் செய்யும் விமர்சனம் மக்கள் மத்தியில் எடுபடாது. கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பைப் பட்டியலினத்து மக்களின் முன்னேற்றத்திற்காகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வதே 'சமூக நீதி க்குத் திருமாவளவன் செய்யும் உண்மையான தொண்டாக இருக்கும்.
முஸ்லிம் லீக் அடைந்திருக்கும் மகிழ்ச்சிக்குச் சொல்லவே வேண்டாம்! சிறுபான்மைச் சமூகத்தின் நன்மைகளை உறுதி செய்யும் அதேசமயம், மத நல்லிணக்கத்தையும் பேணிப் பாதுகாக்க அவர்களை வாழ்த்தி வரவேற்போம்!
வெறுப்புக்கும், அரசியல் காழ்ப்பு உணர்ச்சிக்கும் இடமே தராமல் இயங்கட்டும் விஜய் அரசு! 'அன்பே சிவம்' என்பதே இந்த அரசின் தாரக மந்திரமாக அமையட்டும்!
What's Your Reaction?