நாளை முதல் உயரும் பால் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

தமிழ்நாட்டில் நாளை முதல் ஆரோக்யா பால், தயிர் விலை உயர உள்ளதாக ஹட்சன் நிறுவனம் அறிவித்துள்ளது.

Jul 8, 2026 - 15:08
நாளை முதல் உயரும் பால் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

இந்தியாவில் வரலாறு காணாத அளவில் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலும் கடந்த ஓராண்டாக பால் உற்பத்தி சரிவை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, பால் விநியோகத்தை தடையின்றி மேற்கொள்ளவும், பால் வணிகத்தை தக்கவைத்துக் கொள்ளவும் தனியார் பால் நிறுவனங்கள் பால் உற்பத்தியாளர்களுக்கு போட்டி போட்டு அதிக கொள்முதல் விலையை வழங்கி வருகின்றன.

இந்த சூழலில்தான் ஹட்சன் நிறுவனம் ஆரோக்யா பால் மற்றும் தயிரின் விலையை உயர்த்தியுள்ளது.

அரோக்கியா (Arokya) என்பது ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட் (Hatsun Agro Product Ltd.) நிறுவனத்தின் முக்கிய பால் பிராண்டாகும். தமிழ்நாட்டில் நாளை (ஜூலை 9) முதல் ஆரோக்யா பால் மற்றும் ஆரோக்யா தயிரின் விலையை உயர்த்துவதாக ஹட்சன் நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வர உள்ளது.

அதன்படி, ஆரோக்யா பால் அரை லிட்டர் பாக்கெட்டின் விலை ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ஒரு லிட்டர் பால் பாக்கெட்டின் விலை ரூ.3 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஆரோக்யா தயிரின் விலையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரை லிட்டர் தயிர் பாக்கெட்டின் விலை ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளதுடன், ஒரு லிட்டர் தயிர் பாக்கெட்டின் விலை ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது.

மூலப்பொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ள சூழலில் இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், விலை உயர்வுக்கான விரிவான காரணத்தை ஹட்சன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக விளக்கவில்லை.

நாளை முதல் புதிய விலை அமலுக்கு வருவதால், தினசரி பால் மற்றும் தயிரை பயன்படுத்தும் குடும்பங்களின் மாதாந்திர செலவில் கூடுதல் சுமை ஏற்படும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விலை உயர்வு சில்லறை விற்பனை நிலையங்களிலும் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow